Skip to main content

தஞ்சையில் பச்சைக்கொடி பேரணி! - காவிரி உரிமை மீட்புக்குழு அறிவிப்பு!

Published on 06/01/2021 | Edited on 06/01/2021

 

 Green flag rally in Tanjore! -Cauvery Rights Rescue Committee announcement!

 

இன்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில், திருவாரூரில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் அதன் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன், ம.ஜ.க பொதுச் செயலாளர், எம்.எல்.ஏ மு.தமிமுன் அன்சாரி, விவசாயச் சங்க கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர் காவிரி தனபாலன், விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சித் தலைவர் குடந்தை அரசன், தமிழ்த் தேசிய இயக்கத் தலைவர் மருத்துவர் பாரதிமோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பல விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளும் கூட்டத்திற்கு வருகை தந்திருந்தனர்.

 

இதில், டெல்லியில் போராடும் விவசாயிகளை ஆதரித்தும், மத்திய அரசின் உழவர் ஒழிப்புச் சட்டங்களை ரத்து செய்யக் கோரியும், எதிர்வரும் ஜனவரி 21 வியாழன் அன்று காலை, தஞ்சாவூரில் பிரம்மாண்ட பச்சைக் கொடி பேரணி நடத்துவது என்றும் முடிவானது.

 

அதற்கு முன்பாக டெல்டா மாவட்டங்களில் இந்தச் சட்டங்களின் பாதகங்களை விளக்கி துண்டுப் பிரச்சார பரப்புரை நடத்துவது என்றும் முடிவுசெய்யப்பட்டது. போராட்டத்தில் பங்கேற்க முடியாதவர்களும், போராட்ட ஆதரவாளர்களும், வெளிமாநிலங்களில் வாழும் தமிழர்களும், வெளிநாடுவாழ் தமிழர்களும் அன்று காலை சமூக இணையதள வழியான போராட்டங்களில் பங்கேற்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

 

இந்நிகழ்வில், ம.ஜ.க மாநிலச் செயலாளர் நாச்சிக்குளம் தாஜ்தீன், மாநில விவசாய அணிச் செயலாளர் அப்துல் சலாம், திருவாரூர் மாவட்டப் பொருளாளர் ஷேக் அப்துல்லா, தலைமைச் செயற்குழு உறுப்பினர் பொதக்குடி ஜெய்னுதீன், மாவட்ட விவசாய அணிச் செயலாளர் எரவாஞ்சேரி நஜ்முதீன் ஆகியோர் பங்கேற்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழகத்திற்கு நீர் கிடைக்குமா கிடைக்காதா? - முக்கிய பரிந்துரையைக் கொடுத்த ஒழுங்காற்றுக் குழு

Published on 12/09/2023 | Edited on 12/09/2023

 

 'Water should be opened for the next 15 days' - Cauvery Management Committee recommendation

 

காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் 86வது கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. அதன் தலைவர் வினித் குப்தா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி நடைபெற்ற காவிரி மேலாண்மைக் கூட்டத்தில், வினாடிக்கு ஐந்தாயிரம் கன அடி நீரை 15 நாட்களுக்குத் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் கர்நாடக அரசு உத்தரவிட்ட நான்கு நாட்களுக்கு மட்டுமே ஐந்தாயிரம் கன அடி நீர் திறந்து விட்டது. அதன் பிறகு தண்ணீர் திறந்து விடுவதைக் குறைத்துவிட்டது கர்நாடகா. வினாடிக்கு 4,000லிருந்து 3,000 கன அடி நீர் தான் திறந்து விடப்பட்டது. தற்போதைய சூழ்நிலையில் காவிரி பாசனப் பகுதியில் குறுவை நெற்பயிர்கள் சாகுபடிக்காகக் காத்திருக்கிறது. உடனடியாக தண்ணீரைத் திறந்து விடக் கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது. அதேபோல் கர்நாடக அரசு தொடர்ந்து தமிழகத்திற்குத் தண்ணீர் தர மறுக்கிறது எனப் புகாரும் கொடுக்கப்பட்டது.

 

எதிர்த்தரப்பான கர்நாடக அரசு அதிகாரிகள், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் நீர்வரத்து குறைந்திருக்கிறது. தற்போதைய சூழ்நிலையில் தங்களால் தொடர்ந்து தண்ணீர் திறந்து விட முடியாது எனப் பல்வேறு கணக்குகளைக் காட்டினர். இரண்டு தரப்பினர் கருத்துக்களையும் கேட்ட ஒழுங்காற்றுக் குழு தலைவர், வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் அடுத்த 15 நாட்களுக்குத் தண்ணீர் திறந்துவிட வேண்டும் எனக் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு பரிந்துரைத்துள்ளார். விரைவில் டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Next Story

மேட்டூர் அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு

Published on 26/07/2023 | Edited on 26/07/2023

 

Increase in water release in Mettur Dam

 

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வந்த கனமழை காரணமாகக் கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறக்கப்பட்டு வருகிறது. குறிப்பாகக் குடகு மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாகக் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதன் காரணமாகக் கர்நாடகாவின் கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்தும் கபினி அணையிலிருந்தும் நீர் திறக்கப்பட்டுள்ளது.

 

இதனால் கர்நாடக அணைகளிலிருந்து தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி கபினி அணையிலிருந்து 15,000 கன அடி திறக்கப்பட்டு வருகிறது. கே.ஆர்.எஸ். அணையிலிருந்து 2,688 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் திறந்து விடப்பட்ட நீரானது நேற்று ஒகேனக்கல் வந்தடைந்தது. தமிழ்நாட்டின் எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று காலை 2,000 கன அடியாக இருந்த நீர் வரத்து மாலையில்  5,000 கன அடியாக உயர்ந்தது. இதனால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 5,000 கன அடியாக உள்ளது. காவிரி நீர் தமிழக எல்லையைக் கடந்துள்ளதால் பிலிகுண்டுலுவைச் சுற்றியுள்ள கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 177 கன அடியாக உள்ளது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 12 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் அணையில் இருந்து நீர் திறப்பின் அளவு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.