Skip to main content

''அரசுகளால் ஒரு எல்லைக்கு மேல் நம்மைக் காக்க முடியாது''-கமல்  

Published on 27/04/2021 | Edited on 27/04/2021

 

"Governments cannot protect us beyond a certain limit" - Kamal

 

தமிழகத்தில் இரண்டாம் அலை காரணமாக நாளுக்கு நாள் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் நேற்று மேலும் 15,684 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று சென்னையில் ஒரே நாளில் 4,250 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 1,07,145 ஆக அதிகரித்துள்ளது. நேற்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி தமிழகத்தில் 94 பேர் கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். அரசு மருத்துவமனைகளில் 50 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 44 பேரும் கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனா உயிரிழப்பு மொத்த எண்ணிக்கை என்பது 13,615 ஆக அதிகரித்துள்ளது. 

 

இந்நிலையில் ''நம் வசந்த காலங்கள் திரும்ப வரும்'' என  மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது,''கரோனாவை எதிர்த்து நம்பிக்கையுடன் போராடுவோம். நம் வசந்த காலங்கள் நிச்சயம் திரும்ப வரும். கரோனாவால் கடந்த ஆண்டிலிருந்தே நமது வாழ்வு எதிர்பாராத வகையில் மாறிப் போய்விட்டது. எந்த தயக்கமும், அச்சமும் இல்லாமல் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அத்தியாவசிய சேவைகளுக்காக வெளியே சென்றுவரும் பொறுப்பை இளைஞர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். அரசுகளால் ஒரு எல்லைக்கு மேல் நம்மைக் காக்க முடியாது என்பதே புள்ளி விவரங்கள் காட்டும் நிதர்சனம்'' என்று கூறியுள்ளார்.

 


 

சார்ந்த செய்திகள்