
தமிழகத்தில் கிராமசபைக் கூட்டங்கள் நடத்தாதது குறித்து ஜனவரி 22-ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பஞ்சாயத்துச் சட்டப்படியும், கிராமசபை கூட்ட விதிகளின்படியும் ஆண்டுக்கு நான்கு முறை, கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தியை ஒட்டி, கிராமசபைக் கூட்டங்கள் நடத்துவதற்கு பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை, ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர், செப்டம்பர் 26-ஆம் தேதி வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், கரோனா தொற்றைக் காரணம் காட்டி, அக்டோபர் 2 -ஆம் தேதி நடக்க இருந்த கிராமசபைக் கூட்டங்களை ரத்து செய்து, மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்தனர்.
இதை எதிர்த்து, நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளர் மவுரியா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், கிராமங்களின் நிர்வாகம், வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விவாதிக்கக் கூட்டப்படும் கிராமசபைக் கூட்டங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. எந்த முக்கியக் காரணமும் இல்லாமல், கிராமசபைக் கூட்டங்களை ரத்து செய்தது சட்டவிரோதமானது. ரத்து செய்யப்பட்ட கிராமசபைக் கூட்டங்களை நடத்தக் கோரி ஊரக வளர்ச்சித் துறை இயக்குனருக்கு அனுப்பிய மனு மீது, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு, நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் சார்பாக வக்கீல் விஜயன் சுப்பிரமணியம் ஆஐராகி, அரசு பதில் அளிக்க உத்தரவிட வேண்டும் என்றார். இதைக் கேட்ட நீதிபதிகள், ஜனவரி 22 -ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
மேலும், இதே கோரிக்கையுடன் திமுக எம்.எல்.ஏ கே.என்.நேரு தொடர்ந்த வழக்கோடு இந்த வழக்கும் சேர்த்து விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.