
திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டுவருகின்றன. குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், துபாய், சார்ஜா உள்ளிட்ட இடங்களிலிருந்து வரும் விமானங்களில் தங்கம் கடத்திவரும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில், நேற்று (21.12.2021) துபாயிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இந்த சோதனையில் யாரும் தங்கம் கடத்தியதாக பிடிபடவில்லை.
இதற்கிடையில், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்த பிரபாகரன் (வயது 34) என்பவர் கழிவறையில் இருந்துவந்துள்ளார். அப்போது, அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த சுங்கத்துறை அதிகாரிகள், அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது தனது உடலில் பேஸ்ட் வடிவில் தங்கத்தை மறைத்து எடுத்துவந்ததும், அந்த தங்கத்தைக் கழிவறையில் வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து விமான நிலைய கழிவறையில் இருந்த 724.5 கிராம் தங்கத்தைப் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூபாய் 35 லட்சத்து 79 ஆயிரம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.