Skip to main content

கோரிக்கை வைத்த சிறுமி.... பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி முதலமைச்சர் அதிரடி!

Published on 19/03/2022 | Edited on 19/03/2022

 

The girl who made the request .... Chief Minister writes a letter to Prime Minister Narendra Modi and takes action!

 

கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையில் வசிக்கும் நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த மாணவிகளுடன் வீடியோ காலில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, மாணவிகள் தங்களை மிகவும் பிற்படுத்தப்பட்டப் பிரிவிலிருந்து பழங்குடியினர் பட்டியலுக்கு மாற்றுமாறு கோரிக்கை வைத்தனர். இதைத் தொடர்ந்து, இது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். 

 

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழகத்தில் நரிக்குறவர் குருவிக்காரர் சமூகம் என்று அழைக்கப்படும் நாடோடி பழங்குடியினரை, தமிழகத்தின் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்தை ஈர்த்து, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (19/03/2022) கடிதம் எழுதியுள்ளார்.

 

முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழக அரசின் பரிந்துரைகளின் அடிப்படையில், "குருவிக்காரர் குழுவினருடன் இணைந்த நரிக்குறவர்" சமூகத்தினரை, தமிழகத்தின் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் திட்டத்திற்கு இந்திய தலைமைப் பதிவாளர் ஒப்புக் கொண்டுள்ளதாக, மத்தியப் பழங்குடியினர் விவகாரங்கள் துறையின் இயக்குநர் மத்திய அரசின் கடிதத்தின் மூலம் (எண் 12016/S/2011 C&LM-1, நாள் 30/04/2013) தெரிவித்திருந்ததை, இந்தியப் பிரதமருடைய கவனத்திற்குக் கொண்டுவர விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும், வல்லுநர் குழுக்களான லோகூர் குழு 1965- ஆம் ஆண்டிலும், நாடாளுமன்றக் கூட்டுக் குழு 1967- ஆம் ஆண்டிலும், இந்த சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க பரிந்துரைத்தேன் என்றும், நரிக்குறவர்கள் மிகவும் பின்தங்கிய மற்றும் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய சமூகங்களில் ஒன்று என்றும், பழங்குடியினர் பட்டியலில் அவர்களைச் சேர்ப்பதன் மூலம், அவர்கள் அனைத்து அரசமைப்பு ரீதியிலான பாதுகாப்பு மற்றும் நலத் திட்டங்களைப் பெறத் தகுதியுடையவர்களாவார்கள் என்றும் தனது கடிதத்தில் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பாக பல கோரிக்கைகள் அளிக்கப்பட்டிருந்தும், இந்த சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

எனவே, இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, நரிக்குறவன் / குருவிக்காரன் சமூகத்தினரை தமிழகத்தில் உள்ள பழங்குடியினர் பட்டியலில் சேர்த்திட விரைந்து கேட்டுக் கொண்டுள்ளார். நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்." இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்