Skip to main content

’அப்போதே நீதி செத்துவிட்டது’-தர்மபுரி பேருந்து எரிப்பில் கொல்லப்பட்ட மாணவி காயத்ரியின் தந்தை கண்ணீர் 

Published on 19/11/2018 | Edited on 19/11/2018
ff

 

ஜெயலலிதா மீதான ஊழல் வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது.  தீர்ப்பை எதிர்த்து அதிமுகவினர் மாநிலம் முழுதும் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். அப்போது தர்மபுரியில் அதிமுகவினர் பேருந்தை எரித்ததில் வேளாண் கல்லூரி மாணவிகள் 3 பேர் உயிரோடு கொளுத்தப்பட்டனர்.  அந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் மூன்று பேருக்கு முதலில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.  பின்னர் உச்சநீதிமன்றத்தில் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று ஆயுள் தண்டனையையும் ரத்து செய்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களை விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளார். 

 

t

 

ஆளுநரின் இந்த உத்தரவு குறித்து இறந்துபோன மாணவிகளில் ஒருவரான கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள கோ.பூவனூர் கிராமத்தை சேர்ந்த காயத்ரியின் தந்தை  வெங்கடேசனிடம் கேட்டதற்கு, 


" எங்கள் பிள்ளைகளை எரித்து கொன்றவர்களுக்கு வழங்கப்பட்ட மரணதண்டனையை என்றைக்கு உச்சநீதிமன்றத்தில் அரசியல் ஆட்சி அதிகாரங்களை பயன்படுத்தி ஆயுள் தண்டனையாக மாற்றினார்களோ அப்போதே நீதி செத்துவிட்டது. இப்போது அவர்களை விடுதலை செய்திருப்பதன் மூலம் நீதி தேவதை தலை குனிந்து நிற்கிறாள்.
 எங்கள் மகளை பறிகொடுத்து தவிக்கிறோம் நாங்கள். எங்களுக்கு வயதாகிவிட்டது. எதிர்த்துப் போராட எங்களிடம் தெம்பில்லை. இவற்றிற்கெல்லாம் இறைவன் அல்லது இயற்கை தகுந்த தண்டனை கொடுக்கும் என்று அவைகளிடம் விட்டு விடுகிறோம்" என்றார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

கருவுற்ற 13 வயது சிறுமி; குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

Published on 26/08/2022 | Edited on 26/08/2022

 

Pregnant 13-year-old girl! Youth arrested in Kundasal!

 

பாப்பிரெட்டிப்பட்டி அருகே, 13 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கர்ப்பிணியாக்கிய வாலிபரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

 

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அண்ணா நகரைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (30). இவர் கடந்த மார்ச் மாதம் அதே பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதனால் சிறுமியின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. சிறுமிக்கு, தர்மபுரி அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவர், 3 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. 

 

அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இதுகுறித்து பாப்பிரெட்டிப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் காவல் ஆய்வாளர் லதா வழக்குப்பதிவு செய்து ஜெயக்குமாரை பிடித்து விசாரித்தார். அவர் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததும், அதனால்தான் அவர் கர்ப்பம் அடைந்தார் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து ஜெயக்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். 

 

ஜெயக்குமாரை, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட எஸ்.பி. கலைச்செல்வன் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதை ஏற்றுக்கொண்ட ஆட்சியர் உத்தரவிட்டதன் பேரில், ஜெயக்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். 

 

 

Next Story

கையகப்படுத்திய நிலத்திற்கு இழப்பீடு எங்கே? 18 ஆண்டாகப் போராடும் 85 வயது முதியவர்

Published on 26/08/2022 | Edited on 26/08/2022

 

Where is the compensation for acquired land? An 85-year-old man who has been fighting for 18 years!

 

வீட்டுமனைத் திட்டத்திற்காக கையகப்படுத்திய நிலத்திற்கான இழப்பீடு கேட்டு, 18 ஆண்டாக அலைக்கழிக்கப்பட்டு வந்த 85 வயது முதியவர், வட்டாட்சியர் அலுவலகத்தை ஜப்தி செய்யும் அதிரடி செயலில் இறங்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள தட்டையாம்பட்டியைச் சேர்ந்தவர் மாரகவுண்டர் (85). இவருடைய மனைவி பார்வதி. இவர்களுக்குச் சொந்தமான 8 ஏக்கர் நிலத்தை, ஆதிதிராவிடர் நலத்துறை வட்டாட்சியர் அலுவலகம், இலவச வீட்டுமனைத் திட்டத்திற்காக கையகப்படுத்திக் கொண்டது. ஆனால் அதற்காக உரிய இழப்பீடு தொகை மாரகவுண்டருக்கு வழங்கவில்லை. இதுகுறித்து அவர் கடந்த 2004ம் ஆண்டு, தர்மபுரி சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 2008ம் ஆண்டு இந்த வழக்கு அரூர் சார்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. 

 

கடந்த 2012ம் ஆண்டு, மாரகவுண்டவுக்கு இழப்பீட்டுத் தொகை 13 லட்சம் ரூபாய் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனாலும் இழப்பீட்டுத் தொகையை வழங்காமல் காலம் கடத்தி வந்ததால், மாரகவுண்டர் கடந்த 2015ம் ஆண்டு நிறைவேற்று மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மனுதாரருக்கு அசல் இழப்பீடு, வட்டி ஆகியவை சேர்த்து 22 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டது. இந்த தொகை வழங்கத் தவறினால் வட்டாட்சியர் அலுவலக பொருள் ஜப்தி செய்யப்படும் என்றும் உத்தரவில் கூறப்பட்டு இருந்தது. 


இந்த உத்தரவையும் மதிக்காமல் ஆதிதிராவிடர் நலத்துறை வட்டாட்சியர் அலுவலகம் கிடப்பில் போட்டது. இதையடுத்து, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ராஜா மற்றும் சார்பு நீதிமன்ற அமீனா ஆகியோர் தர்மபுரி ஆதிதிராவிடர் நலத்துறை வட்டாட்சியர் அலுவலக பொருள்களை ஜப்தி செய்வதற்காக ஆக. 24ம் தேதி சென்றனர். 


அங்குள்ள மேஜை, நாற்காலி, கணினி பிரிண்டர் ஆகிய பொருள்களை எடுத்து வெளியே வைத்தனர். அப்போது மாரகவுண்டர் தரப்பினரிடம் வருவாய்த்துறை அலுவலர்கள் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். இழப்பீடு தொகை விரைவில் வழங்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து ஜப்தி நடவடிக்கையை கைவிட்டு கலைந்து சென்றனர். 


இந்த சம்பவம் வருவாய்த்துறை அலுவலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.