Skip to main content

ரயில் விபத்து; ‘தமிழ்நாடு அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணிகள் என்ன?’ - முழு விவரம் வெளியீடு!

Published on 12/10/2024 | Edited on 12/10/2024
Full details for What are the rescue operations carried out by the TN govt on train incident

கவரைப்பேட்டை ரயில் விபத்தைத் தொடர்ந்து  தமிக அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்ட மீட்பு பணிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், “திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டம், கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகில் லூப் லைனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு இரயில் மீது நேற்று (11.10.2024) அன்று சுமார் இரவு 08.30 மணியளவில் மைசூரிலிருந்து பீகார் மாநிலம் தர்பாங்கா செல்லும் பாக்மதி அதிவிரைவு பயணிகள் ரயில் (ரயில் எண்.12578) மோதியது. இதில் பயணிகள் ரயிலின் முதல் 7 பெட்டிகள் தடம் புரண்டது. இதில் ஒரு பெட்டியில் தீ விபத்தும் ஏற்பட்டது. பயணிகள் ரயிலில் பயணம் செய்த 19 பேர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக நேற்றிரவு தகவல் கிடைத்தவுடன் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்பேரில், சம்பவ இடத்திற்கு சிறுபான்மையினர் நலம் மற்றும் அயல்நாட்டுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் நாசர், கும்மிடிபூண்டி சட்டமன்ற உறுப்பினர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கூடுதல் காவல்துறை இயக்குநர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) ஆகியோர் சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டனர். இந்நிகழ்வில் பயணிகள் இரயிலில் சுமார் 1, 600 பேர் பயணம் செய்ததாக தெரியவருகிறது.

சரக்கு இரயிலின் 3 பெட்டிகள் சேதமடைந்தது. சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்த 19 நபர்கள் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டு, அவர்களில் மூன்று பயணிகள் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதோடு காயமடைந்த 4 பயணிகள் பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்பேரில், தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஸ்டான்லி மருத்துவமனைக்கு நேரில் சென்று, காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறி, அவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்திட மருத்துவர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், விபத்து நடந்த இடத்தில் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள பயணிகள் தங்க வைக்கப்பட்டுள்ள விவரம், அவர்கள் சொந்த ஊருக்குத் திரும்புவதற்கான மாற்று ஏற்பாடு, உணவு மற்றும் குடிநீர் உள்ளிட்ட வசதிகள் குறித்து கேட்டறிந்து அவற்றை உரிய முறையில் செய்து தரப்பட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தினார்.

Full details for What are the rescue operations carried out by the TN govt on train incident

இந்த விபத்து நடந்த இடத்தல் மீட்புப் பணிகளுக்காக திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 3 தீயணைப்பு வாகனங்கள், வட மண்டல இணை இயக்குநர் தலைமையில் இரண்டு மாவட்ட அலுவலர்கள் மூன்று நிலைய அலுவலர்கள் மற்றும் 25 தீயணைப்பு வீரர்களுடன் துரிதமாக செயல்பட்டது. இதனால் விபத்து இடத்தில் ஏற்பட்ட தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டு இதர பெட்டிகளுக்கு தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது. இதுதவிர விபத்து ஏற்பட்ட இடத்திற்கு 28 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் 3 மருத்துவக் குழுவினர் மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த விபத்தினால் தங்கள் பயணத்தை தொடர முடியாத பயணிகள் சுமார் 800க்கும் மேற்பட்டோர் கவரப்பேட்டையிலுள்ள கல்யாண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான குடிநீர், உணவு மற்றும் இதர வசதிகள் செய்து தரப்பட்டதுடன். அத்திருமண மண்டபங்களிலிருந்து பொன்னேரி ரயில் நிலையத்திற்கு 20க்கும் மேற்பட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் மூலம் அழைத்து செல்லப்பட்டு, பொன்னேரியிலிருந்து சிறப்பு ரயில் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.

நேற்றிரவு நடந்த இரயில் விபத்தில் உரிய மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு, உயிர்ச்சேதம் எதும் ஏற்படாமல், காயமடைந்தவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளித்ததுடன், பாதிக்கப்பட்ட பயணிகள் அனைவர்க்கும் தேவையான உதவிகள் வழங்கியதற்காக தமிழ்நாடு அரசுக்கு அப்பயணிகள் தங்களது நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்