Skip to main content

பிப்ரவரி 03 இல் மதுக்கடை பூட்டுப் போடும் போராட்டம் - அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்

Published on 22/01/2018 | Edited on 22/01/2018
பிப்ரவரி 03 இல் மதுக்கடை பூட்டுப் போடும் போராட்டம் - 
அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்

பேராவூரணி சேதுசாலையில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்குச் செல்லும் வழியில், பொதுமக்கள், வணிகர்கள், பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு இடையூறாக இயங்கிவரும் டாஸ்மாக் மதுக்கடைக்குப் பூட்டுப் போடும் போராட்டம் நடத்தப்படும் என்று போராட்டக்குழு அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இந்த மதுக்கடை தொடர்பாக பலமுறை போராட்டம் நடத்தியும், கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற சமாதான பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொண்டபடி ஜன 20ந் தேதி கடை அகற்றப்படவில்லை. இதையடுத்து ஞாயிறு அன்று அடுத்த கட்ட போராட்டம் குறித்த கலந்தாலோசனைக் கூட்டம் பெரியார் அம்பேத்கர் நூலகத்தில் நடைபெற்றது. 

போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் ஆறு நீலகண்டன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், சி.பி.எம் கருப்பையா, வேலுச்சாமி, சி.பி.ஐ.  இராசமாணிக்கம், ம.தி.மு.க. வ.பாலசுப்பிரமணியன், நாம் தமிழர் கட்சி திலீபன், வெற்றிச்செல்வன், தமிழ்க்குமரன், திராவிடர் விடுதலைக் கழக சித.திருவேங்கடம், தா.கலைச்செல்வன், மனிதநேய ஜனநாயகக் கட்சி ச.அப்துல்சலாம், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம்  த.ஜேம்ஸ், தமிழக மக்கள் புரட்சிக் கழகம் இரா.மதியழகன், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆசீர்வாதம், மெய்ச்சுடர் நா.வெங்கடேசன் உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில் பல்வேறு அகிம்சை வழியிலான மக்கள் போராட்டத்திற்கும், அரசு அதிகாரிகள் - போராட்டக்குழு சமாதானக் கூட்டத்தின் முடிவுகளுக்கும் மதிப்பளிக்காமல் தன்னிச்சையாக மக்கள் விரோதமாகச் செயல்பட்டு வரும் டாஸ்டாக் நிர்வாகத்திற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. சமாதான பேச்சுவார்த்தையில், ஒப்புக்கொண்டதை 'நிறைவேற்ற முடியாது' என வருவாய் கோட்டாட்சியர் கைவிட்ட நிலையில், மக்களுக்கும், மாணவிகளுக்கும் இடையூறாக இயங்கிவரும் மதுக்கடைக்குப் பிப்ரவரி 3 ஆம் தேதி மாணவர்கள், பெற்றோர்கள், கடைத்தெரு வியாபாரிகள், பல்வேறு இயக்கத்தினர்கள், பொதுமக்களை ஒன்றுதிரட்டி முற்றுகையிட்டு பூட்டுப்போடுவது என தீர்மானிக்கப்பட்டது.

-இரா. பகத்சிங்

சார்ந்த செய்திகள்