Skip to main content

குலதெய்வம் கோவிலுக்கு வந்த குடும்பம்; குளத்தில் பறிபோன 3 உயிர்கள்

Published on 15/05/2023 | Edited on 15/05/2023

 

A family who came to the clan deity temple for prayers; 3 lives were passed away in temple itself

 

நீலகிரி மாவட்டம் ஊட்டியைச் சேர்ந்தவர்கள் விஜயகாந்த் - விஜயலட்சுமி தம்பதி. இவர்களது மகள்களான அக்க்ஷயா(15), தனலெட்சுமி (12) மற்றும் உறவினர்களுடன் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பள்ளத்து விடுதி கிராமத்தில் அமைந்துள்ள தங்கள் குலதெய்வமான மயிலியாத்தம்மன் கோயில் கிடா வெட்டு பூஜைக்காக வந்துள்ளனர். இவர்களுடன் விஜயகாந்தின் தம்பி ஆனந்தகுமார் (29)  வந்துள்ளார்.

 

விஜயகாந்த்தின் குடும்பத்தினர் திங்கள் கிழமை மதியம் பள்ளத்திவிடுதி வந்து சேர்ந்தனர். இந்நிலையில் பயணக் களைப்பு தீர அதே கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோயில் குளத்தில் குளிப்பதற்காக அக்க்ஷயா மற்றும் அவரது தங்கை தனலெட்சுமி அவர்களது சித்தப்பா ஆனந்தகுமார் ஆகிய மூவரும் சென்றுள்ளனர்.

 

குளத்தில் இறங்கி குளித்துக் கொண்டிருந்த போது தனலட்சுமி தண்ணீரில் மூழ்கியுள்ளார். அவரை காப்பாற்ற அக்க்ஷயாவும் ஆனந்தகுமாரும் முயன்றுள்ளனர். அதற்குள் தனலெட்சுமி ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டார். தனலட்சுமியை காப்பாற்ற இவர்களும் அங்கே சென்ற போது எதிர்பாராத விதமாக மூவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் மூவரையும் காப்பாற்ற முயற்சித்துள்ளனர். நெடு நேரத்திற்கு பின் மூவரையும் மீட்டு அப்பகுதி மக்கள் அவர்களை ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். மருத்துவமனையில் அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் மூவரும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

 

இதன்பின் மூவர் சடலங்களையும் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஆலங்குடி காவல் துறையினரும் வருவாய் துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

கோடை காலங்களில் குளம், ஏரிகளில் தண்ணீர் நிரம்பியுள்ள நிலையில் இது போன்ற துயரச் சம்பவ தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது போன்ற சம்பவங்களை தவிர்க்க எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்கின்றனர் கிராம மக்கள். தங்களின் வேண்டுதல் நிறைவேற குலதெய்வத்தை வழிபட தொலை தூரத்தில் இருந்து வந்தவர்களுக்கு நடந்த துயர சம்பவத்தால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்