Skip to main content

கோவில் கடைகளை காலி செய்வதற்கான கால அவகாசம் ஜனவரி -31 வரை நீடிப்பு

Published on 01/11/2018 | Edited on 01/11/2018
la

 

தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து கோவில் கடைகளையும் காலி செய்வதற்கான கால அவகாசம் 31-ஜனவரி 2019 வரை நீடித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.


மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பிப்ரவரி 2-ம் தேதி மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 19 கடைகள் எரிந்து சாம்பலானது.

 

இந்த தீ விபத்தை அடுத்து தமிழக அரசு அமைச்சரவையை கூட்டி கொள்கை முடிவெடுத்து தமிழகத்தில் இந்துசமய அறநிலைய துறைக்கு உட்பட்ட அனைத்து கோயில்களிலும் உள்ள கடைகளை அகற்ற உத்தரவு பிறப்பித்தனர்.

 

இந்துசமய அறநிலைய துறை ஆணையர் அந்தந்த கோவில் அதிகாரிகளுக்கு கோயில் வளாகத்தில் உள்ள கடைகளை அகற்றுமாறு சுற்றறிக்கை அனுப்பினர். சுற்றறிக்கை உத்தரவை எதிர்த்தும், மாற்று இடம் வழங்கக்கோரியம் கடை உரிமையாளர்கள் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தனர். தமிழக கோயில்களின் பழமையை பாதுகாக்கும் வகையில் கோயில் வளாகத்தில் உள்ள கடைகளை 2018 டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் அகற்றுமாறு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.


மதுரை மீனாட்சி அம்மன் கோவில், ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில், சங்கரன்கோவில் உள்ளிட்ட கோவில்களை சேர்ந்த கடை வியாபாரிகள் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
அதில் உரிய காலஅவகாசம் வழங்காமல் மற்றும் மாற்று இடம் வழங்காமல் கடைகளை காலி செய்யுமாறு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யுமாறு மேல்முறையீட்டு மனுக்களில் கூறியிருந்தனர்.

 

இந்த மனுக்கள் இன்று நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணன், கிருஷ்ணவள்ளி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஏற்கனவே உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி பாரதிதாசன் தமிழகம் முழவதிலும் உள்ள கோவில் கடைகளை காலி செய்ய வேண்டும் என கூறியது சரி எனவும்,  தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து கோவில் கடைகளையும் காலி செய்வதற்கான கால அவகாசத்தை 31-ஜனவரி 2019 வரை நீடிப்பதாகவும்,
கடைகளை காலி செய்ய  வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்ய கோரிய அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்வதாகவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

நனையும் ஆட்டுக்காக அழுகிற ஓநாய்! - கோயில்களை அபகரிக்கும் ஈஷா!

Published on 14/04/2021 | Edited on 14/04/2021
ddd

 

சிவராத்திரி விழாவை ஜிலுஜிலு ராத்திரியாக மாற்றிய பெருமைக்குரியவர் ஈஷா யோக மையம் எனும் ஆன்மிக வியாபாரத்தலத்தை நடத்திவரும் ஜக்கிவாசுதேவ் சாமியார். பிரதமர் முதல் பிரபல திரை நட்சத்திரங்கள் வரை பலரையும் அழைத்து, தன்னுடைய மார்க்கெட்டை உயர்த்திக் கொண்டவர். சிவனுக்கு ஆதியோகி சிலை வைக்கிறேன் என்று சொல்லி, தன் முகத்தை சிலையாக வைத்து பக்தர்களையே அதிர்ச்சியடைய வைத்தவர்.

 


ஈஷா மையத்தில் எந்த நிகழ்வாக இருந்தாலும் தனித்தனிக் கட்டணம் விதித்து, அதற்கேற்ப அனுமதிக்கும் கார்ப்பரேட் சாமியாரான ஜக்கி வாசுதேவ், இந்த சிவராத்திரியில் குவிந்த பக்தர்களிடம் ஓர் அட்டையைக் கொடுத்து, உயர்த்திப்பிடிக்கச் சொன்னார். அந்த அட்டையில், “"கோவில் அடிமை நிறுத்து'’’ என எழுதப்பட்டிருந்தது. "கோவிலில் அடிமைகள் இருக்கிறார்களா, அவர்களை எங்கே கொண்டு போய் நிறுத்துவது' என்றெல்லாம் குழம்ப வேண்டாம். அரசாங்கத்தின் இந்து அறநிலையத் துறையிடம் கோவில்கள் அடிமையாக இருக்கின்றனவாம்... அதை நிறுத்தி, அரசாங்கத்திடமிருந்து விடுவிக்க வேண்டுமாம்.

 

எதற்காக அரசாங்கத்திடமிருந்து விடுவிக்க வேண்டும்?

 

பல கோவில்கள் பராமரிக்கப்படவில்லையாம். ஒருகால பூசைகூட நடைபெறவில்லையாம். அதனால், "அரசாங்கத்திடமிருந்து மீட்டு, இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும்' என்கிறார். அவர் சொல்லும் இந்துக்கள் யார்?

 

 

கொஞ்சம் விவரமாகப் பார்க்கலாம்.

 

 

கடந்த மார்ச் 25-ஆம் நாள் திருவாரூர் தியாகராஜ சாமி திருக்கோவிலின் ஆழித் தேரோட்டம் நடைபெற்றது. 1920-களில் ஓடிய தேர், தீவிபத்தில் எரிந்துபோன நிலையில்... புதிய தேர் வடிவமைக்கப்பட்டு, 1940-களின் நடுப்பகுதிவரை ஓடியது. அதன்பிறகு தேரோட்டம் நின்று போனது. வருமானம் இல்லையா? தியாகராஜ சாமி திருக்கோவிலுக்கு 1000 வேலி நிலம் (1 வேலி=ஏழரை ஏக்கர்) உண்டு. அதனை நிர்வகித்தவர்கள் இந்து பரம்பரை தர்மகர்த்தாக்கள்தான். ஆனாலும், தேரோட்டத்தை நடத்த முடியவில்லை.

 

 

ddd

 

1969-ல் முதலமைச்சரான கலைஞர், அடுத்த ஆண்டு திருவாரூர் ஆழித்தேரோட்டத்தை சிறப்பாக நடத்திக்காட்டினார். வடம் பிடித்து இழுக்கும் பக்தர்கள் பெரியளவில் சிரமப்படாதவாறு, தேரோடும் தெருக்களை அகலப்படுத்தி, தேரின் சக்கரத்துக்கு பால்பேரிங் பொருத்தி, தேரைச் சீராக ஓட்டுகிற வகையில் திருச்சி பெல் நிறுவனத்தின் பொறியாளர்களைக் கொண்டு ஹைட்ராலிக் பிரேக் சிஸ்டம் அமைத்து ஆழித்தேரை ஓடச் செய்தார். இப்போதும் அதே நவீன முறைப்படி தேரோட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்து அறநிலையத்துறைதான் தேரோட்டத்தை நடத்துகிறது. அதன் நெறிமுறைகள் -ஆகமங்கள் ஆகியவற்றை அதற்கான பக்தர்களைக் கொண்ட குழு கவனித்துக்கொள்கிறது.

 

திருக்கோவில் திருவிழாக்களுக்கே உரிய அனைத்து அம்சங்களுடனும் தேரோட்டத்தை சிறப்பாக நடத்துகிறார்கள். அதிலும் இந்த முறை, பங்குனி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் தேரோட்ட வேண்டும் என்கிற இந்து முன்னணி -ஆர்.எஸ்.எஸ். -சிவபக்தர்கள் உள்ளிட்ட அமைப்புகளின் கோரிக்கையையும் ஏற்று, அதே நட்சத்திரத்தில் தேரோட்டம் நடைபெற்றது. நவீன முறையில் கலைஞர் ஆட்சியில் தேரோட்டம் நடைபெற்றபோதும் இதுபோலவே பக்தர்களின் கோரிக்கையை ஏற்று ஆயில்யத்தில் தேரோட்டம் நடைபெற்றது.

 

பின்னர் எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில், புராதன கோவில்களில் பாதுகாப்பற்ற நிலையில் கைவிடப்பட்டிருந்த இறைவன்-இறைவி செப்புத் திருமேனிகளைப் பத்திரமாக எடுத்து வந்து, திருவாரூர் கோவிலில் கட்டப்பட்ட சிலை பாதுகாப்பு மையத்தில் வைத்தனர். அவை எந்தெந்த கோவில்களுக்கு உரியனவோ, அந்தக் கோவிலின் திருவிழா நடைபெறும்போது, இந்த செப்புத் திருமேனிகள் அங்கு எடுத்துச் செல்லப்படும். அதன்பிறகு மீண்டும் சிலை பாதுகாப்பு மையத்திற்கு கொண்டு வரப்படும்.

 

இதனிடையே, புராதன கோவில்களைப் பாதுகாக்கும் பணியை இந்து அறநிலையத்துறை, தொல்லியல் துறை ஆகியனவும் மேற்கொண்டன. அதன் காரணமாக பல கோவில்கள் புனரமைக்கப்பட்டன. அங்கேயே பாதுகாப்பாகச் சிலைகளை வைக்கும் வழக்கம் ஏற்பட்டது. எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது, ஆசியாவிலேயே உயரமான திருவரங்கம் கோவிலின் தெற்கு ராஜகோபுரப் பணிகள் நிறைவடைந்து, புனித நீராட்டு நடைபெற்றது. கலைஞர் ஆட்சிக் காலத்தில் மன்னை ராஜகோபால சுவாமி, திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் உள்ளிட்ட பல பெரிய கோவில்களுக்கு குடமுழுக்கு நடை பெற்றது. கும்பகோணம் மகாமகம் குளம், மயிலாப்பூர் தெப்பக்குளம், திருவாரூர் கமலாலயம் திருக்குளம் ஆகியவை தூர்வாரப்பட்டன.

 

திருக்கோவில்களில் ஒரு கால பூசை என்பது உறுதி செய்யப்பட்டது. அதற்கான நிதி வசதி இல்லாத கோவில்களுக்கு நன்கொடைகள் பெறப்பட்டன. உபயதாரர்கள் வாயிலாக பூசை மட்டுமின்றி, அன்னதானமும் நடைபெற்றது. ஜெயலலிதா ஆட்சியில் திருக்கோவில்களில் அன்னதானத்தைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்தார். இவை அனைத்தையும் ஒருங்கிணைக்க வேண்டிய பொறுப்பு இந்து அறநிலையத்துறையினுடையது. அந்த அறநிலையத்துறையிடமிருந்து கோவில்களை மீட்டு ‘இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஜக்கி வாசுதேவ் சொல்கிறார்.

 

 

அவர் மட்டுமா சொல்கிறார்? பா.ஜ.கவின் ஹெச்.ராஜா சொல்கிறார். ஆர்.எஸ்.எஸ். சொல்கிறது. விஸ்வ இந்து பரிஷத் சொல்கிறது. அதையேதான் ஜக்கியும் சொல்கிறார். ஜக்கி பேசுவது, செய்வது எல்லாமே பா.ஜ.க பாணியிலேயே இருக்கும். கோவில்களை அறநிலை யத்துறையிடமிருந்து மீட்பதற்காக 3 கோடி பேர் ஆதரவு தெரிவித்திருக்கிறார்களாம். மிஸ்டுகால் கொடுத்திருக்கிறார்களாம். இந்த ‘மிஸ்டு கால்’ கலாச்சாரத்தை தமிழ்நாட்டில் தனது கட்சியின் உறுப்பினர் சேர்க்கைக்காக நுழைத்தது பா.ஜ.க.தான். பல லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்ததாக அந்தக் கட்சி சொன்னது. தனித்து நின்று நோட்டாவைவிடக் குறைவாக ஓட்டு வாங்கியது. ஜக்கியும் அதே போல ஏமாற்றுகிறார். ஏற்கனவே காவிரியை காப்பதாகக் கூறி மிஸ்டுகால், பண வசூல் என பல மோசடிகளைச் செய்தார்.

 

திருக்கோவில்கள் பாதுகாப்புக்கான இந்து அறநிலையச் சட்டம் என்பது, பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தில் சென்னை மாகாணத்தை தேர்தல் வெற்றி மூலம் நிர்வாகம் செய்த நீதிக் கட்சி ஆட்சியின் முதல் அமைச்சர் பனகல் அரசரால் கொண்டு வரப்பட்டதாகும். காஞ்சி சங்கராச்சாரியார் உள்ளிட்ட இந்துமதத் தலைவர்களின் ஆலோசனைகள் -திருத்தங்கள் -ஒப்புதல் இவற்றோடுதான் அது நிறைவேற்றப்பட்டது. இதன்படி கோவில் சொத்துகளை ஆக்கிரமித்து வைத்திருந்த தனியார் பெருமுதலைகளிடமிருந்து அவற்றை மீட்டு, உரிய கணக்கு வழக்குடன் நிர்வாகம் செய்யும் பணியை அரசு மேற்கொண்டது. திருவிழாக்கள் உள்ளிட்ட ஆகமங்கள் சார்ந்தவற்றை அரசாங்கம் மாற்ற முடியாது. 

 

ddd

 

பின்னர் சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஓமந்தூர் ராமசாமியார், காமராஜர் போன்றவர்களின் ஆட்சியில் இந்து அறநிலையத்துறை பலப்படுத்தப்பட்டது. அதன் பிறகே, கோவில் நிலங்கள் காலம்காலமாக எவர், எவர் கைகளிலோ சிக்கியிருப்பது கண்டறியப்பட்டு, மீட்கப்பட்டு கணக்கிற்குள் கொண்டு வரப்பட்டது. இந்து அறநிலையத்துறையில் இந்து மதத்தினர் மட்டுமே இடம்பெறுவர். அது அமைக்கும் கமிட்டிகளில் பட்டியல் இனத்தவர் -பெண்கள் உள்பட இந்துக்களே இடம்பெறுவர். எல்லா வகையிலும் இந்து மதத்தினரை சார்ந்தே இயங்கக்கூடிய அறநிலையத்துறையை அரசாங்கத் திடமிருந்து எடுத்து, தனியாரிடம் கொடுக்க வேண்டிய அவசியம் எங்கே வந்தது?

 

"கோவில்கள் பராமரிக்கப்படவில்லை -கோவில் நிலங்கள் பறிபோகின்றன -சிலைகள் திருட்டுப் போகின்றன' என்கிறார்கள். அரசு நிர்வாகத்தில் முறைகேடுகள் இருந்தால் அவற்றை சரிசெய்ய வேண்டியது கட்டாயம். அதே நேரத்தில், சிலைகள் திருட்டுப் போகிறதென்றால், கோவிலின் அர்ச்சகருக்குத் தெரியாமல் களவுபோக முடியாது. செப்புத் திருமேனியை அன்றாடம் தொட்டுப் பூசை செய்யும் உரிமை கொண்டவர்கள் அர்ச்சகர்கள் மட்டுமே. அதிலும், அனைத்து சாதியினரும் அதற்குள் வரக்கூடாது என்று ஒரு தரப்புக்கே பட்டா போட்டுத் தரப்பட்டிருக்கும் நிலையில்... கோவில் சிலைகள் களவு போகின்றன என்றால் அதற்கு உடந்தையாக இருப்பது யார்?

 

சிதம்பரம் நடராசர் கோவிலை அரசாங்கம் நிர்வகித்தபோது, உண்டியல் காணிக்கை லட்சங் களில் இருந்தது. தீட்சிதர்களிடம் ஒப்படைக்கப் பட்டபோது, மூவாயிரம், நான்காயிரம் என வெகு வாகக் குறைந்தது. தனியாரிடம் கோவில்கள் ஒப்படைக்கப்பட்டால் என்னவாகும் என்பதற்கு இதுவே சாட்சியம். கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு எனக் கூவுகிற ஈஷா மையம் எங்கே உள்ளது? வெள்ளியங்கிரி அடிவாரத்தில் யானைகள் வலசை செல்லும் வனப்பகுதியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள தால் இன்றுவரை இயற்கை ஆர்வலர்களும், வனப் பகுதி மக்களும் போராடிக்கொண்டிருக்கின்றனர்.

 

அதிகாரத்தில் இருப்பவர்களிடம் செல்வாக்கை வளர்த்துக்கொண்டு ஆன்மிகத்தின் பெயரால் இயற்கையைச் சுரண்டி வயிறு வளர்ப்போர், "கோவில் அடிமை நிறுத்து'’என்கிறார்கள். இந்நிலையில், தமிழக பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கையில், "இந்து கோவில்களை ‘துறவிகளிடம் ஒப்படைப்போம்' என வாக்குறுதி அளிக்கப்பட்டிருக்கிறது.

 

இப்போது புரிகிறதா, ஆடுகளுக்காக அழுகிற ஓநாய்களின் லட்சணம்?

 

-கீரன்


 

Next Story

அமைச்சரை விட உங்களுக்கு அண்ணாமலையார் முக்கியமா? -எகிறிய ந.செ.!

Published on 21/11/2020 | Edited on 21/11/2020
ttt

 

 

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா, கரோனா பரவலால் மிக எளிமையாக கோயிலுக்குள்ளேயே நடைபெறுகிறது. வெளி மாவட்ட, வெளி மாநில பக்தர்கள் திருவிழாவை காண வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. உள்ளுர் பக்தர்களும் அனுமதி பெற்று கோயிலுக்குள் வரச்சொல்லப்பட்டுள்ளது.

 

தீபத்திருவிழாவிற்கான கொடியேற்றம் அண்ணாமலையார் கோயிலுக்குள் உள்ள தங்ககொடி மரத்தில் நவம்பர் 20ந் தேதி காலை 5.50 மணிக்கு ஏற்றப்படும் என அறிவிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி, எஸ்.பி உட்பட முக்கிய அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் அனைவரும் வந்துவிட்டனர்.

 

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரான சேவூர்.ராமச்சந்திரன் கோயிலுக்கு வந்துகொண்டுள்ளார், அதனால் பூஜையை தொடங்குங்கள் எனச் சொல்லப்பட்டதும் சிவாச்சாரியர்கள் மந்திரங்களை ஓத துவங்கினர். சன்நிதானத்துக்குள் இருந்து பஞ்சமூர்த்திகள் கொடிமரம் முன்பு வந்து எழுந்தருளினார். இதற்கே அரை மணி நேரம் கடந்தது. ஆனாலும் அமைச்சர் கோயிலுக்குள் வரவில்லை. கொடியேற்றத்துக்கான மந்திரங்களை, பூஜையை பாதியில் நிறுத்த முடியாது, நிறுத்தினால் ஆன்மீக குத்தம் ஏற்பட்டுவிடும் என்பதால் தீபத்திருவிழாவிற்கான கொடியேற்றப்பட்டது. கொடியேற்றி முடித்த 10 நிமிடத்துக்கு பின்னர் அமைச்சர் சேவூர்.ராமச்சந்திரன், தெற்கு மா.செ அக்ரி.கிருஷ்ணமூர்த்தி இருவரும் தங்களது படைபரிவாரங்கள் 50 பேரோடு கோயிலுக்குள் வந்து சேர்ந்தார்.

 

rrr

 

கொடிறே்றப்பட்டுவிட்டது என்பதை அறிந்து அமைச்சர் சேவூர்.ராமச்சந்திரன் அதிருப்தியாகிவிட்டார். திருவண்ணாமலை அதிமுக ந.செ செல்வம், அமைச்சர் வருவதற்கு முன்பு உங்களை யார் கொடியேற்றச் சொன்னது, நான்தான் அமைச்சர் வந்துக்கிட்டு இருக்காருன்னு எத்தனை முறை போன் செய்து சொன்னன். சொல்லியும் கொடியேத்தறிங்கன்னா என்ன அர்த்தம்? இங்க என்ன ஜனாதிபதி ஆட்சியா நடக்குது. 4 மணிக்கு கொடியேத்தறன்னு சொன்னா, 4 மணிக்கெல்லாம் கொடியேற்றிடுவிங்களா? உங்களுக்கு அமைச்சரை விட அண்ணாமலையார் முக்கியமாகிவிட்டாரா? என அனைவர் முன்பும் கோயில் இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் சிவாச்சாரியர்களை சத்தம் போடத் துவங்கினார். இது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியடைய செய்துவிட்டது. அதிகாரிகள் யாரும் எதுவும் சொல்லவில்லை. பின்னர் கொடிமரம் முன்பு அமைச்சர் உட்பட ஆளும்கட்சியினரை நிற்கவைத்து சுவாமி தரிசனம் செய்ய வைத்தனர் அதிகாரிகள். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.

 

தீபத்திருவிழாவில் பக்தர்கள், கட்டளைதாரர்கள், உபயதாரர்களுக்கு அனுமதியில்லை என மாவட்ட நிர்வாகம், கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அப்படியிருக்க தீபத்திருவிழாவின் முதல்நாளான கொடியேற்றத்தின் போது நூற்றுக்கணக்கான முக்கிய பிரமுகர்கள் எப்படி கோயிலுக்குள் வந்தார்கள்? மக்கள் பிரதிநிதிகள் வருவதை கூட ஏற்றுக்கொள்ளலாம். மக்கள் பிரதிநிதியாக இல்லாத நூற்றுக்கும் அதிகமான அதிமுகவினர் எப்படி கோயிலுக்குள் வந்தார்கள். அவர்களை கோயில் நிர்வாகம், காவல்துறை எப்படி அனுமதித்தது. பக்தர்களுக்கு திருவிழா காண அனுமதியில்லை என அறிவித்தார்கள். அப்படியிருக்க முக்கிய பிரமுகர்கள், அரசியல் பிரமுகர்கள், அதிமுகவினரான ஆளும்கட்சியினர்க்கு அனுமதி உண்டா என்கிற கேள்வி அண்ணாமலையார் பக்தர்களிடம் எழுந்துள்ளது.

படங்கள்: விவேகானந்தன்