Skip to main content

மின்வேலியில் சிக்கி யானை பலி; வனத்துறை ஊழியர்கள் 3 பேர் பணியிடைநீக்கம்!

Published on 16/05/2022 | Edited on 16/05/2022

 

Elephant passed away by electric fence; 3 forest employees sacked
கோப்புப் படம் 

 

தர்மபுரி அருகே, விவசாய நிலத்தைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி யானை உயிரிழந்த சம்பவத்தில், வனத்துறை ஊழியர்கள் மூன்று பேர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர்.


தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே உள்ள நல்லம்பட்டியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (52). விவசாயி. இவருக்குச் சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. அதில் நெல் பயிரிட்டுள்ளார். நெற்பயிர்களை காட்டு விலங்குகள் சேதப்படுத்தி விடக்கூடாது என்பதற்காக விவசாய நிலத்தைச் சுற்றிலும் மின்வேலி, மின்விளக்கு அமைத்துள்ளார். கடந்த சில நாள்களுக்கு முன்பு, அந்த வழியாக வந்த மக்னா யானை, சீனிவாசனின் நிலத்திற்குள் செல்ல முயன்றபோது மின்வேலியில் சிக்கி  உயிரிழந்தது. 


இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் மற்றும் பாலக்கோடு காவல்நிலைய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில், விவசாயி சீனிவாசன் மின்வாரியத்தின் அனுமதியின்றி நிலத்தைச் சுற்றிலும் மின்வேலி அமைத்து இருந்தது தெரியவந்தது. யானை இறந்த சம்பவத்திற்குப் பிறகு சீனிவாசன் தலைமறைவாகிவிட்டார். காவல்துறையினர் தேடி வருவதை அறிந்த அவர், மே 13ம் தேதி மாரண்டஅள்ளி காவல்நிலையத்தில் சரணடைந்தார். அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர், நீதிமன்ற உத்தரவின்பேரில் தர்மபுரி கிளைச்சிறையில் அடைத்தனர். 


இது ஒருபுறம் இருக்க, பணியில் அலட்சியமாக செயல்பட்டதாக பாலக்கோடு வனச்சரகர் செல்வம், வனக்காப்பாளர் கணபதி, வனவர் கல்யாணசுந்தரம் ஆகியோரை பணியிடைநீக்கம் செய்து தர்மபுரி மண்டல வனப்பாதுகாவலர் பெரியசாமி உத்தரவிட்டுள்ளார். 


இதுகுறித்து வனப்பாதுகாவலர் பெரியசாமி கூறுகையில், ''வனச்சட்டத்தின்படி மின்வேலி அமைக்கப்படக் கூடாது. தடையை மீறி யாராவது மின்வேலி அமைத்துள்ளார்களா என ரோந்து சென்று கண்காணிக்க வேண்டிய வனத்துறையினரின் கடமை. தற்போது பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ள வன ஊழியர்கள் முன்கூட்டியே ரோந்து சென்றிருந்தால், கண்காணிப்புடன் இருந்திருந்தால் இன்றைக்கு ஒரு யானை இறந்திருக்காது. அதனால்தான் கவனக்குறைவாக இருந்த ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என்றார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தர்மபுரி பா.ம.க. வேட்பாளர் மாற்றம்; தொண்டர்கள் கொண்டாட்டம்!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Dharmapuri pmk candidate change Celebration of volunteers

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அதன்படி மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் பா.ஜ.க. மற்றும் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் நேற்று (21.03.2024) வெளியானது. அதில் பட்டாளி மக்கள் கட்சிக்கு காஞ்சிபுரம், அரக்கோணம், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து பா.ம.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதன்படி அரக்கோணம் - பாலு, கடலூர் - தங்கர்பச்சான், திண்டுக்கல் - திலகபாமா, தர்மபுரி - அரசாங்கம், விழுப்புரம் - முரளி சங்கர், ஆரணி - கணேஷ் குமார், மயிலாடுதுறை - ம.க. ஸ்டாலின், சேலம் - அண்ணாதுரை, கள்ளக்குறிச்சி - தேவதாஸ் அறிவிக்கப்பட்டனர். காஞ்சிபுரத்திற்கு மட்டும் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் தருமபுரி தொகுதியில் பா.ம.க. வேட்பாளர் அரசாங்கம் மாற்றப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக அக்கட்சியின் தலைவர் அன்புமணியின் மனைவியும், பசுமை தாயகம் அறக்கட்டளையின் தலைவருமான சௌமியா அன்புமணி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தருமபுரியில் பா.ம.க.வினர் பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர்.

Next Story

யானைகள் தொடர் அட்டகாசம்; வனத்துறையை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
 villagers staged a struggle against the forest department as the elephants continued to roar
கோப்புப்படம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கள்ளப்பாடி, கே.வலசை, கணவாய் மோட்டூர், அனுப்பு, டிபி பாளையம், உள்ளிட்ட பகுதிகள் தமிழக ஆந்திர எல்லையை ஒட்டி உள்ளது. இங்கு தொடர்ந்து யானைகள்  விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

மேலும் பயிர்களை தொடர்ந்து யானைகள் சேதப்படுத்தி வருவதாகவும் அதை கட்டுக்குள் கொண்டு வர வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சேதம் அடைந்து வரும் பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரியும் கிராம மக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் குடியாத்தம் - பரதராமி சாலையில் கணவாய் மோட்டூர் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் குடியாத்தம் பரதராமி சாலையில் சாலை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பரதராமி காவல்துறையினர் மற்றும் குடியாத்தம் வனத்துறையினர், மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் உரிய நடவடிக்கை எடுப்பதாக வனத்துறையினர்  உறுதி அளித்தனர். இதனையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.