விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள சித்தானங்கூர் ஊராட்சிக்கு உட்பட்ட பழையபட்டணம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் நடராஜன்(80), லட்சுமி(75) தம்பதி. நடராஜன் விவசாய வேலை செய்து வந்தார்.
இந்த தம்பதிக்கு ராஜேந்திரன், முருகன் என இரண்டு மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர். பிள்ளைகளுக்கும் திருமணமாகி அவரவர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். நடராஜனும் அவரது மனைவி லட்சுமியும் மட்டும் தனியாக பழைபட்டணம் கிராமத்தில் வசித்து வந்தனர். வயது முதிர்வின் காரணமாக உடல் ரீதியாக ஏற்படும் நோய்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ செலவுகளுக்கும், சாப்பாட்டுக்கும், அன்றாட செலவுகளுக்கும் பணம் இல்லாமல் பரிதவித்து வந்தனர். தங்கள் பிள்ளைகளிடம் பணம் கேட்டும் அவர்கள் யாரும் உதவி செய்ய முன்வரவில்லை எனச் சொல்லப்படுகிறது.
இதனால் மனமுடைந்த அவர்கள் இருவரும் கடந்த 16 ஆம் தேதி விஷம் குடித்துள்ளனர். வெகு நேரமாக அவர்கள் வீட்டில் இருந்து சத்தம் ஏதும் வராததால் அக்கம் பக்கத்தினர் அவர்களது வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது அவர்கள் இருவரும் பேச்சு மூச்சு இன்றி இருந்துள்ளனர். உடனடியாக அவர்களை மீட்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்தத் தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் உடலை பிரேதப் பரிசோதனை செய்து நடராஜன் உறவினர்களிடம் ஒப்படைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.