
புயல் பாதித்த பகுதிகளை பார்வையிடுவதற்காக திருச்சி சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டை மாவட்டம் சென்றார். புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் இருந்து மாப்பிள்ளையார்குளம் சென்ற அவர் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து பட்டுக்கோட்டையில் புயலால் தென்னை மரங்கள் சாய்ந்து கிடந்த இடம் ஒன்றை பார்வையிட்டார். அந்த இடம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதி இல்லை என்று தெரிய வந்துள்ளது. கட்டுமான நிறுவனம் ஒன்று கட்டிடம் கட்ட அந்த இடத்தில் இருந்த தென்னை மரங்களை வெட்டியுள்ளனர். அந்த மரங்கள் மொட்டை மரங்களாக இருந்துள்ளன.

இதுபற்றி அப்பகுதி விவசாயிகளிடம் விசாரித்தபோது, புயல் தாக்கியதில் இருந்து எந்த உதவியும் கிடைக்காமலும், புயலால் வீடுகள் மீதும், சாலைகளில் விழுந்த மரங்களையும் அகற்றாததை கண்டித்தும், புதுக்கோட்டை முழுவதும் குடி தண்ணீர், மின்சாரம் அறவே கிடையாத நிலையில் பொதுமக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். அதனால் அமைச்சர்கள் வந்தால் எதிர்க்கின்றனர். கொத்தமங்கலத்தில் அரசு அதிகாரிகளின் வாகனங்களை எரித்துள்ளனர். இந்த நிலையில் முதல் அமைச்சர் வந்தால் அவருக்கு எதிர்ப்பு இருக்கக்கூடும் என்பதால், ஹெலிகாப்டர் இறங்கும் இடத்திற்கு பக்கத்திலேயே உள்ள இடத்திற்கு அவரை அழைத்துச் சென்று காட்டிவிட்டனர். மக்கள் கூடிவிடுவார்கள் என்பதால் அவசர அவசரமாக கட்டிடம் கட்டுவதற்காக மரங்கள் வெட்டப்பட்ட இடத்தை காட்டிவிட்டு அழைத்துச் சென்றுள்ளளனர். இதற்கு அவர் தலைமைச் செயலகத்திலேயே உட்கார்ந்திருக்கலாம்.

மேடையில் பேசும்போது தான் ஒரு விவசாயி விவசாயி என்கிறார் எடப்பாடி பழனிசாமி. சேலத்தில் உள்ளவர்களும் விவசாயிகள்தான். இங்கு உள்ளவர்களும் விவசாயிகள்தான் என்பதை அவர் நினைத்து பார்க்க வேண்டும். எட்டு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும்போது ஒரு தென்னை மரத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும் என்கிறார். கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு தென்னை ஒன்றுக்கு 600 ரூபாய் என்றும், வெட்டு கூலி 500 ரூபாய் என்றும் அறிவிக்கிறார். இது என்னங்க நியாயம் என தங்களது கோபத்தை வெளியிப்படுத்தினர்.