Skip to main content

தட்டி கேட்க ஆளில்லை அதனால்தான் திமுக கிராமசபா கூட்டம் நடத்துகிறது – எ.வ.வேலு

Published on 10/01/2019 | Edited on 10/01/2019

 

ee


திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்கள் மனங்களை வெல்வோம் எனச்சொல்லி ஒவ்வொரு கிராமத்திலும் திமுக நிர்வாகிகள் சென்று கிராமசபா கூட்டம் நடத்த வேண்டும் என்றார். அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 09.01.2019 புதன்கிழமை காலை 8.00 மணிக்கு, திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழ்கச்சராப்பட்டு என்ற கிராமத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கிராமசபா கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சரும், திருவண்ணாமலை தொகுதி எம்.எல்.ஏவுமான எ.வ.வேலு.

 


ஒரு ஊரில் விளக்கு எரியவில்லை என்று சொன்னால், ஒரு ஊர் சுத்தமாக இல்லை என்று சொன்னால், பாதை சரியாக இல்லை என்று சொன்னால், இவைகள் எல்லாம் உள்ளாட்சி மூலமாகத்தான் தீர்த்துக்கொள்ள முடியும். ஊராட்சி தலைவராக இருப்பவர்கள், ஐந்தாயிரம் ஓட்டு கவுன்சிலராக இருப்பவர்கள், மாவட்ட கவுன்சிலர்கள்தான் கிராமப்பகுதியில் இருக்கக்கூடிய பிரச்சனைகளை தீர்க்கக்கூடிய அதிகாரம் உள்ளவர்கள். மூன்று ஆண்டுகாலமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத காரணத்தால், இன்றைக்கு கிராமப்பகுதிகளில் எந்த பணிகளும் நடைபெறவில்லை அது உங்களுக்கே தெரியும்.

 


தமிழ்நாட்டில் கிட்டதட்ட 12,528 ஊராட்சிகள் உள்ளது. நாம் வீட்டு வரி, குழாய் வரி, சொத்து வரி கட்டுகிறோம், நாம் வரிக்கட்டும் பணம் மத்திய அரசாங்கத்திற்கு செல்கிறது. அவர்கள் நமது உள்ளாட்சியில் உள்ள பிரச்சனைகளை சீர் செய்வதற்காக ஆண்டுதோறும் நம் மாநிலத்துக்கு 3,500 கோடி ரூபாய் தருவார்கள். இந்த பணத்தைதான் நம் மாவட்டத்திற்கும், நமது ஒன்றியத்திற்கு பிரித்து கொடுப்பார்கள். இந்த பணத்தை வைத்துக்கொண்டுதான் உள்ளாட்சிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்யமுடியும். மத்திய அரசாங்கம் பணம் அனுப்பவேண்டும். ஏன் பணம் அனுப்பவில்லை என்று கேட்டால், உள்ளாட்சி தேர்தல் நடத்தினால்தான் நாங்கள் பணத்தை அனுப்புவோம் எனக் கூறிவிட்டது.

 


உள்ளாட்சி தேர்தலை நடத்தாது யாருடைய தவறு, இங்கு இருக்கிற எடப்பாடியின் அதிமுக அரசாங்கத்தின் தவறு. தோல்வி பயத்தின் காரணமாக தேர்தலை நடத்த மறுக்கிறார்.  அவருடைய சுயநலத்திற்காக தேர்தலை நடத்த முன்வரவில்லை. இவர்கள் தேர்தல் நடத்தாததால் மத்திய அரசிடம் இருந்து உள்ளாட்சிக்கான பணம் 3 ஆண்டுகளாக கிடைக்கவில்லை. இதனால் நம்முடைய அடிப்படை வசதிகளான சாலை, கால்வாய், போன்ற வேலைகள் நடக்கவில்லை. நடக்கும் சில வேலைகளும் அதிகாரிகள் மூலமாக நடக்கிறது. அதிகாரிகள் என்ன பண்ணுகிறார்கள், எந்த வேலைகள் எடுத்தாலும் கமிஷன், கமிஷன், கமிஷன்.. முதியோர் உதவித்தொகை வேண்டுமென்று மனு அளித்தால் உதவித்தொகை வருதா? வரவில்லை.

 


நம் ஊரில் ஒரு ஊராட்சி தலைவர் இருந்தால் அதை தட்டிக்கேட்பார், தட்டிக்கேட்பதற்கு உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாத காரணத்தால், திமுக தலைவர் ஸ்டாலின், கிராமங்களில் கிராம சபாக்கூட்டம் நடத்தச்சொல்ல தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.

 


மோடி, முதல்வராக இருக்கும் போது, கிராம மக்களின் குறைகளை அறிந்தார்,  இவர் பிரதமரானால் இன்னும் இந்தியாவில் உள்ள அனைத்து கிராம மக்களுக்கும் சலுகைகளை வாரி இறைப்பார் என்று நினைத்தேன். அவரும் பிரதமராக வந்தார். இந்தியாவை மாற்றிக்காட்டுவேன் என்றார். ஆனால் இந்தியாவை மாற்றவில்லை.

 


ஒரு நாள் இரவு 500, 1000 செல்லாது என்று அறிவித்தார். அப்புறம் 500, 1000 வைத்திருப்பவர்கள் அருகில் இருக்கும் வங்கிகளில் மாற்றிக்கொள்ளுங்கள் என்று சொன்னார். நாம் ஆட்கள் எல்லாம் வங்கிகளில் நின்றார்கள், பலபேர் வங்கி வாசலில் மயங்கி விழுந்தார்கள். இந்தியாவில் 50 பேர் உயிரிழந்து விட்டனர். கருப்புபணத்தை ஒழிக்கபோறேன் என்று சொன்னார். ஒவ்வொரு இந்தியரின் வங்கி கணக்கிலும் 15 இலட்சம் போடுகிறேன் என்றார். ஆனால், இன்றுவரை வரவில்லை. 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாங்கித்தருகிறேன் என்றார். ஆனால் இன்றுவரை எதுவும் நடக்கவில்லை. என்று எ.வ வேலு பேசினார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.