![dy](http://image.nakkheeran.in/cdn/farfuture/jFShH5O3LBmbC5_Jzwm_bOGaegBnxkY5FKJZ21ztZaY/1539126306/sites/default/files/inline-images/dyfi_1.jpg)
சேலம் மாநகராட்சியில் திடீரென்று சொத்து வரி உயர்த்தப்பட்டதை உடனடியாக ரத்து செய்யக்கோரி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இன்று (அக்டோபர் 9, 2018) மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர். கோட்டை மைதானத்தில் இருந்து மாநகராட்சி அலுவலகம் வரை ஊர்வலகமாக வந்து மனு கொடுத்தனர்.
சேலம் மாநகராட்சி தலைமை அலுவலகம் முன்பு அந்த அமைப்பினர் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், சொத்துவரி உயர்வைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினர்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநிலத் தலைவர் செந்தில் கூறுகையில், ''தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்துவரி மாற்றி அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. சேலம் மாநகராட்சி பகுதியில் குடியிருப்புகளுக்கு 50 முதல் 150 சதவீதம் வரையும், வணிக கட்டடங்களுக்கு 100 சதவீதம் வரையிலும் சொத்துவரி உயர்த்தப்பட்டு உள்ளது.
இந்த வரி உயர்வால், ஏ-ழைகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். ஏற்கனவே ஜிஎஸ்டி வரி, பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் சொத்துவரி உயர்வு பேரிடியாக உள்ளது.
உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாத நிலையில், சொத்துவரி உயர்த்தப்பட்டு உள்ளது. இதை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால் தமிழகம் முழுவதும் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்,'' என்றார்.