பேருந்து பயணத்தின் போது எச்சில் துப்பிய பயணி: எச்சரித்து அனுப்பிய போலீசார்
ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் இருந்து கோபிச் செட்டிபாளையத்துக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் நகரப்பேருந்து (சி-'7) என்ற நகரபேருந்து நேற்று மாலை புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தது.
அப்பேருந்து, இராமநாயக்கனூர் என்ற இடத்தில், மாலை, 4:30 மணிக்கு சென்றபோது, கோபியை சேர்ந்த இராமசாமி, (வயது-60), என்பவர் இருசக்கர வாகனத்தில் நகரப் பேருந்தை முந்திக்கொண்டு சென்றார்.
அப்போது பேருந்தில் இருந்த யாரோ ஒரு பயணி பேருந்தின் ஜன்னல் வழியாக வெளியே வெற்றிலை எச்சிலை துப்பியுள்ளார். அந்த எச்சில் இரு சக்கர வண்டியில் சென்ற இராமசாமி சட்டையில் விழுந்தது.
இதனால், எரிச்சலடைந்த இராமசாமி பேருந்தை வழிமறித்து வண்டியை நிறுத்தியவர். எச்சில் துப்பியவரை கண்டுபிடித்து சத்தம் போட்டுள்ளார். ஆனால், வாயில் வெற்றிலையுடன் இருந்தவர் தான் எச்சில் துப்பவில்லை என்று கூறியுள்ளார்.
இதையடுத்து, இராமசாமியின் வேண்டுகோளின் படி பேருந்தை சிறுவலூர் காவல் நிலையத்துக்கு பேருந்து கொண்டு செல்லப்பட்டது. போலீசாரும் நிலைமையை உணர்ந்தவர்களாக பயணிகளிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இதற்குள், பேருந்தில் இருந்த பயணிகளே எச்சில் துப்பியவரை கண்டுபிடித்து, அவரை எச்சரித்து, இரு சக்கர வண்டியில் வந்த இராமசாமியிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கேட்டுள்ளனர்.
வாயில் வெற்றிலையுடன் இருந்தவர், தான் தான் கவனிக்காமல் எச்சில் துப்பியதாகவும், அதற்காக மன்னிப்பும் கேட்டுக்கொண்டார். இதையடுத்து, இனிமேல் பேருந்தில் பயணம் செய்யும் போது இந்தமாதிரி எச்சில் துப்பக்கூடாது என்ற எச்சரிக்கையுடன் போலீசார் அவரை விடுவித்தனர். இதனால், பேருந்து முக்கால் மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
சிவசுப்பிரமணியன்