Skip to main content

’என் மகளின் படிப்பிற்கு தொந்தரவு செய்யக் கூடாது’ - மனித உரிமை கமிசன் முன் சோபியா தந்தை வைத்த வேண்டுகோள்!

Published on 24/09/2018 | Edited on 24/09/2018
so

 

கடந்த மாதம் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு சென்ற விமானத்தில் பயணம் செய்த கனடா நாட்டு மாணவி சோபியா, உடன் பயணம் செய்த பா.ஜ.க. மாநில தலைவி தமிழசை சௌந்திர ராஜனைப் பார்த்து, பா.ஜ.க. ஆட்சியை எதிர்த்துக் கோஷமிட்டுக் கைதானார். விமான நிலையத்தில் போலீசாரால் எட்டு மணி நேர விசாரணைக் குடைச்சலுக்குள்ளானார். மாணவி மீது, தமிழிசை கொடுத்த புகார் பதிவு செய்யப்பட்ட போது அவருக்கெதிராக, அவர் தந்தை அந்தோணிசாமி கொடுத்த புகார் பதிவு செய்யப்படவில்லை.

 

so

 

இது தொடர்பாக அந்தோணிசாமி மாநில மனித உரிமை கமிசனில் புகார் செய்திருந்தார் அந்தக் கமிசனின் உறுப்பினரும், நீதிபதியுமான ஜெயச்சந்திரன் இன்று நெல்லை சர்க்யூட் ஹவுசில் விசாரணை நடத்தினார். புதுக்கோட்டை இன்ஸ்டெக்டர் திருமலை, மாணவி சோபியா, அவர் தந்தை மூவரும் ஆஜரானார்கள்.

 

அப்போது,  ‘’என் மகளின் படிப்பிற்கு தொந்தரவு செய்யக் கூடாது.  அவரது வெளி நாட்டு படிப்பு தடையின்றி நடைபெறவேண்டும் அதற்கு இடையூறு தரக் கூடாது. அவரது பாஸ்போர்ட்டை முடக்கக் கூடாது.  நாங்கள் தமிழிசையின் மீது கொடுத்த புகாரைப் பதிவு செய்ய வேண்டும்’’ என்று கோரிக்கை வைத்துள்ளார் சோபியாவின் தந்தை அந்தோணிசாமி.

அடுத்த கட்ட விசாரணை வரும் 26ம் தேதிக்கு ஒத்திவைத்தார் நீதிபதி ஜெயச்சந்திரன்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழிசை மீது வழக்குபதிவு செய்ய உத்தரவு : சோபியா வழக்கில் நீதிபதி அதிரடி

Published on 25/10/2018 | Edited on 25/10/2018
சொ

 

மாணவி சோபியாவை மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மீது வழக்குப்பதிவு செய்ய என்று காவல்துறைக்கு தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

வழக்குப்பதிவு செய்து நவம்பர் 20ம் தேதி விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

 

தமிழக பாஜக தலைவர் தமிழிசை, கடந்த செப்டம்பர் 3ம் தேதி சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் சென்றார். அப்போது அவரது இருக்கையின் அருகே பெற்றோருடன் அமர்ந்திருந்த கனடாவில் உள்ள மாண்ட்ரியல் பல்கலைக் கழகத்தில் பி.எச்டி பயின்று வரும், தூத்துக்குடி கந்தன் காலனியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு டாக்டர் சாமியின் மகள் லூயிஸ் சோபியா(வயது23), தமிழிசையை பார்த்ததும், ’பாசிச பா.ஜ. ஒழிக’ என்று கோஷமிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து  தமிழிசைக்கும், மாணவி சோபியாவுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழிசை, தூத்துக்குடி விமான நிலைய இயக்குநர் சுப்பிரமணியனிடம் அளித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சோபியாவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் தமிழ்ச்செல்வி, அவரை நிபந்தனையின்றி ஜாமீனில் விடுதலை செய்தார்.

 

இதன் பின்னர்,  தமிழிசை உள்ளிட்ட 10 பேர், சோபியாவை தூத்துக்குடி விமான நிலையத்தில் மிரட்டியதாகவும், ஆகவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் கடந்த செப்டம்பர் 3ம் தேதி புதுக்கோட்டை போலீசிலும், 14ம் தேதி தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.யிடமும் சோபியாவின் தந்தை சாமி புகார் அளித்தார். இந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அவர் சார்பில் வழக்கறிஞர்கள் அதிசயகுமார், சந்தனசேகர், செந்தில்குமார், திலீபன் உள்ளிட்டோர்  தூத்துக்குடி ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட் எண் 3ல் மனுத்தாக்கல் செய்தனர். அதில் தமிழிசை சவுந்திரராஜன் மற்றும் 10 பேர் மீது சட்டப் பிரிவுகள் 341, 294(பி), 506 (1) மற்றும் தமிழ்நாடு பெண்கள் வதை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தனர். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டார்  மாஜிஸ்திரேட் தமிழ்ச்செல்வி.

 

இந்த வழக்கில் விசாரணையை அடுத்து இன்று, தமிழிசை மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

 


 

Next Story

நடப்பது மக்களாட்சியா? மன்னராட்சியா? நடப்பது சனநாயகமா? சர்வாதிகாரமா? - சீமான் கண்டனம்

Published on 04/09/2018 | Edited on 04/09/2018
so

 

சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பயணம் செய்த விமானத்தில் பாஜக-விற்கு எதிராக முழக்கமிட்ட இளம்பெண் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு சென்ற விமானத்தில் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இருக்கையில் மத்தியில் ஆளும் பாஜக அரசை எதிர்த்து விமானத்தில் முழக்கமிட்ட சோபியா என்ற பெண் கைது செய்யப்பட்டிருப்பது மிகுந்த வேதனையை தருகிறது.

 

பாஜகவை எதிர்த்து முழக்கமிட்ட ஒரே காரணத்தினால் கைது செய்யப்பட்டிருப்பது என்பது இந்த நாடு காலம் காலமாய் அரசியலமைப்புச் சட்டத்தின் மூலமாக கொண்டிருக்கிற கருத்துரிமையின் மீது நிகழ்த்தப்பட்டு இருக்கிற கொடும் தாக்குதலாக கருதுகிறேன். முழக்கமிட்டால் கைதா? நடப்பது மக்களாட்சியா? மன்னராட்சியா? இங்கு நடப்பது ஜனநாயகமா? சர்வாதிகாரமா? என்று கேள்வி எழுகிறது.

 

சகிப்புத்தன்மையற்ற ,எதிர் கருத்து எதுவும் தோன்றி விடக்கூடாது என்பதான ஏதோச்சதிகார உளவியல் என்பது பாஜக கட்சியின் அடிப்படை குணாதிசயங்களாக மாறி இருக்கின்றன என்பதற்கு இந்த கைது நடவடிக்கை ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. தொடர்ச்சியாக மக்களை ஆண்டு கொண்டிருக்கின்ற பாஜக அரசின் எதிர்க்கருத்து கொண்டோரை எல்லாம் எப்படியாவது ஒடுக்க முயற்சிப்பது என்பது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது ‌.

 

தொடர்ச்சியாக தமிழகத்தில் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டு இருக்கின்ற மக்கள் நல எதிர்ப்பு திட்டங்களால் தமிழின இளையோர் மிகுந்த வெறுப்பு அடைந்திருக்கிறார்கள் என்பதை தான் இந்த சம்பவம் வெளிக்காட்டுகிறது. கருத்தை கருத்தால் எதிர்கொண்டு அனுப்பி இருக்க வேண்டிய ஒரு இளம்பெண்ணை எதிர்த்து முழக்கமிட்டார் என்ற ஒரே காரணத்திற்காக கைது செய்திருப்பது என்பது தேவையற்ற கண்டிக்கத்தக்க நடவடிக்கையாகும். இந்தக் கைது நடவடிக்கைக்கு எனது வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். கைது செய்யப்பட்டிருக்கிற மாணவி சோபியாவை உடனடியாக நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.’’