Skip to main content

ஓ.பி.எஸ்-ன் சகோதரர் வாக்காளர்களுக்கு வேட்டி, சேலை வழங்கியதாக காரை சிறைபிடித்த திமுகவினர்

Published on 12/02/2022 | Edited on 12/02/2022

 

c


தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட 24வது வார்டில் அதிமுக சார்பில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.சண்முகசுந்தரம் போட்டியிடுகின்றார். இந்நிலையில் நேற்று இரவு 24வது வார்டுக்கு உட்பட்ட வடக்கு மற்றும் தெற்கு அக்ரஹாரத் தெருப்பகுதிகளில் ஓ.சண்முகசுந்தரம் தனது ஆதரவாளர்களுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் வாக்காளர்களுக்கு இலவசமாக சேலை, வேஷ்டி வழங்கி வந்ததாக கூறி, தென்கரை பெருமாள் கோவில் அருகே இருந்த காரை திமுகவினர் சிறை பிடித்து, தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் அளித்தனர். இதனால் திமுக - அதிமுகவினர் இடையே மோதல் உண்டாகும் சூழல் நிலவியதால் பெரியகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் முத்துக்குமார் தலைமையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். திமுகவினரால் சிறை பிடிக்கப்பட்ட காரானது ஓ.பி.எஸ்-ன் மற்றொரு சகோதரரும், தேனி ஆவின் தலைவருமான ஓ.ராஜாவின் மகன் முத்துக்குகன் என்பவருடையதாகும். 

 

இதனால் அதிமுகவினர் ஏராளமானோர் அங்கு குவிந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தேர்தல் பறக்கும் படை அலுவலர் புனிதன் தலைமையிலான அதிகாரிகள் அவரது காரை சோதனையிட முற்பட்ட போது, அதிமுகவினர் அவர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே சிறைப் பிடித்த காரை அங்கிருந்த அதிமுக-வினர் எடுத்துச் செல்ல முற்பட்ட போது, காரை மடக்கிப்பிடித்த காவல்துறையினர் தென்கரை காவல் நிலையத்திற்கு எடுத்து வந்தனர்.‌ அங்கு தேனி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சங்கரன் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் அந்த காரை சோதனை செய்ததில், அதிலிருந்து சுமார் 20 சேலை, வேஷ்டிகள் கைப்பற்றப்பட்டன. 

 

பின்னர் காரின் உரிமையாளர், ஓ.பி.எஸ் சகோதரர் ஓ.ராஜாவின் மகன் முத்துக்குகன் நேரில் வந்து இதுகுறித்து விளக்கம் அளித்தார். அதில் பெரியகுளம் அருகே தான் நடத்தும் பள்ளியில் நடைபெற இருக்கும் விழாவிற்காக அங்கு பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்குவதற்காக காஞ்சிபுரத்தில் இருந்து சுமார் 50 சேலை, வேஷ்டிகள் வாங்கியதாகவும், அதற்கான ரசீதுகளை அதிகாரிகளிடம் சமர்ப்பித்தார். அதனை பெற்றுக் கொண்ட அதிகாரிகள், முத்துக்குகன் பள்ளியிலும் சோதனை செய்ய சென்றனர். மேலும் இது தொடர்பாக பெரியகுளம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே காரில் இருந்து சேலை, வேட்டிகள் கைப்பற்றப் பட்டதும், தேர்தல் விதிமுறைகளை மீறியதாக 24வது வார்டு அதிமுக வேட்பாளர் ஓ.சண்முகசுந்தரத்தை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தேர்தல் அலுவலர்களிடம் திமுக-வினர் புகார் கொடுத்து இருக்கிறார்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்