Skip to main content

தி.மு.க. முன்னாள் பிரமுகர் உள்ளிட்ட இருவருக்கு சரமாரி கத்திக்குத்து!

Published on 28/05/2022 | Edited on 28/05/2022

 

dmk leaders incident police investigation

 

சேலம் அருகே, தி.மு.க. முன்னாள் இளைஞரணி துணை அமைப்பாளர் உள்ளிட்ட இருவரை மர்ம நபர்கள் சரமாரியாக கத்தியால் குத்திக்கொல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

சேலம் உடையாப்பட்டியைச் சேர்ந்தவர் நாகராஜன் (வயது 31). தி.மு.க.வில் அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்து வந்தார். கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாகக்கூறி, அவரை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கடந்த மார்ச் 22- ஆம் தேதி கட்சி மேலிடம் டிஸ்மிஸ் செய்தது. 

 

இந்நிலையில், வியாழக்கிழமை இரவு நாகராஜனும், மேட்டுப்பட்டியைச் சேர்ந்த அவருடைய நண்பரும் பாமக பிரமுகருமான பிருத்விராஜன் (வயது 42) என்பவரும் சங்ககிரியில் இருந்து சேலத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். ஆட்டையாம்பட்டி எஸ்.பாலம் அருகே வந்தபோது, நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் அவர்களை வழிமறித்து, கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றனர். 

 

இந்த தாக்குதலில் நாகராஜன், பிருத்விராஜன் ஆகிய இருவருக்கும் உடலில் பல இடங்களிலும் பலத்த காயம் ஏற்பட்டது. அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாக வந்தவர்கள் இருவரையும் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆட்டையாம்பட்டி காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

இது ஒருபுறம் இருக்க, கடந்த மார்ச் மாதம் தி.மு.க. பிரமுகர் ஒருவர் தன்னிடம் பணம் கேட்டு மிரட்டுவதாகக் கூறி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அவருடைய புகார் மனு, அம்மாபேட்டை காவல்நிலையத்தில் விசாரணையில் உள்ளது. 

 

இது ஒருபுறம் இருக்க, தி.மு.க. பிரமுகர்கள் உள்ளிட்ட பலரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக்கூறி லட்சக்கணக்கில் பணம் வசூலித்துவிட்டு நாகராஜன் ஏமாற்றியதாகவும், பலருடைய கார்களை சினிமா படப்பிடிப்புக்கு வாடகைக்கு விட்டு சம்பாதிக்கலாம் எனக்கூறி பெற்றுச்சென்று, அவர்களுக்குத் தெரியாமல் அடமானம் வைத்து மோசடி செய்ததாகவும் கூறப்படுகிறது. 

 

நாகராஜன் மீதான மோசடி புகார்களும், அம்மாபேட்டை காவல்நிலையத்தில் விசாரணையில் உள்ள நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக அவர் தலைமறைவாக இருந்து வந்தார். இதனால் பணம் கொடுக்கல் வாங்கல் காரணமாக, பாதிக்கப்பட்ட கும்பலைச் சேர்ந்தவர்கள் நாகராஜனை குறிவைத்து இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. 

 

சம்பவம் நடந்த நேரத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்ற வாகனங்கள், இளைஞர்கள் ஆகியோர் முகங்கள் எங்கேயாவது சிசிடிவி கேமராக்களில் பதிவாகி உள்ளதா? என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். நாகராஜன், பிருத்விராஜன் ஆகியோரின் செல்போன்கள் மூலம் பேசப்பட்ட அழைப்புகள் குறித்த விவரங்களையும் சேகரித்து வருகின்றனர்.  


 

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்