
உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் திவாகரன் பேசுவதை நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக நேற்று செய்தியாளர்களுக்கு திவாகரன் அளித்த பேட்டியில், அதிமுக உடைந்ததற்கு தினகரனே காரணம். தினகரன் இல்லை என்றால் அதிமுகவில் பிளவு பட்டிருக்காது. சிறையில் இருந்தாலும் அதிமுகவிற்கு சசிகலாவே பொதுச் செயலாளராக இருந்திருப்பார். அதனை கெடுத்தவர் தினகரன் தான்.
தினகரனால் திட்டமிட்டு சாகடிக்கப்பட்ட அதிமுக அம்மா அணிக்கு நான் இனி உயிர் கொடுப்பேன். மிக விரைவில் தமிழகம் முழுவதும் நான் சுற்றுப் பயணம் செய்து தொண்டர்களை சந்திக்க உள்ளேன். இன்னும் 6 மாதங்களில் தினகரன் தனிமரமாக இருப்பார். என்னை கண்டு தினகரன் பயப்படுகிறார். தினகரனால் இரட்டை இலை சின்னத்தையோ, அதிமுகவையோ இனி மீட்க முடியாது.
தினகரனின் சூழ்ச்சி வலையில் சசிகலா சிக்கி தவிக்கிறார். குரங்கு குட்டியை விட்டு ஆழம் பார்ப்பது போல் தினகரன் வெற்றி வேலை விட்டு என்னை ஆழம் பார்க்கிறார். என் அக்கா சசிகலா வேண்டுமானால் தினகரனிடம் ஏமாந்து இருக்கலாம். நான் ஒரு போதும் ஏமாற மாட்டேன் என திவாகரன் கூறியிருந்தார்.
இந்நிலையில், இன்று இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய டிடிவி தினகரன்,
உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் திவாகரன் பேசுவதை நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. எங்கள் மேல் அவருக்கு பிரியம் இல்லை என்றாலும் நாங்கள் அவர் மீது பிரியமாகத்தான் இருக்கிறோம்.
33 அமைச்சர்களின் நலனுக்காகத்தான் தமிழக அரசு மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கிறதே தவிர மக்களுக்காக அல்ல. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.