Skip to main content

சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டவர்களை பாதுகாக்க மாவட்ட வாரியாக தனிப்பிரிவு!

Published on 19/07/2018 | Edited on 19/07/2018
court

 

சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டவர்களை பாதுகாக்கும் வகையில் மாவட்ட வாரியாக தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

 

உசிலம்பட்டியை சேர்ந்த விமலாதேவியும், திலீப்குமாரும் காதலித்த நிலையில் வீட்டைவிட்டு வெளியேறி 2014ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருமணம் செய்து கொண்டனர். இருவரது குடும்பத்திலும் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் விமலாதேவியை வத்தலகுண்டு பகுதியிலிருந்து மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர். உசிலம்பட்டி பகுதி அரசியல்வாதிகளின் தலையீட்டில் விமலாதேவியை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

ஆனால் சில நாளில் எரிந்த நிலையில் விமலாதேவியின் உடல் மீட்கப்பட்டது தொடர்பாக சிபிஐ விசாரணை கோரியும், தனக்கு பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கு உத்தரவிடக்கோரியும் திலீப்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

 

அந்த வழக்கை விசாரித்த நீதிபதி வெ.ராமசுப்ரமணியன் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டும், திலீப்குமாருக்கு பாதுகாப்பு வழங்கவும் 2016ஆம் ஆண்டு உத்தரவிட்டார்.

மேலும், 
-உரிய முறையில் விசாரிக்காத காவல்துறையினர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தார். 
- ஜாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டவர்களின் புகார்களை கவனிக்க தனிப்பிரிவை ஏற்படுத்த வேண்டும் 
- அவர்களின் புகார்களை பெற 24 மணி நேர தொலைப்பேசி வசதியை ஏற்படுத்த வேண்டும் 
- புகார்களை இணைக்கும் வகையில் காவல்துறையின் சி.சி.ட்டி.என்.எஸ். (CCTNS) வசதியுடன் இணைக்கப்பட வேண்டும் 
- காவல் நிலையங்களில் பெறப்பட்ட புகார்களை மாவட்ட வாரியான பிரிவுகள் கண்காணிக்க வேண்டும் 
- தம்பதிகளை பாதுகாப்பது, பெற்றோர் மீது நடவடிக்கை எடுப்பது என நின்று விடாமல், கலந்தாய்வும் வழங்க வேண்டும் 
- ஆணவக்கொலைகளை களைந்தெடுக்கும் வண்ணம் போதிய நிதி ஒதுக்கி, ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு போதிய இருப்பிட வசதி ஏற்படுத்தி பாதுகாப்பு வழங்க வேண்டும் 
- இதுபோன்ற செயல்பாடுகளில் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க தவறினால்  சம்பந்தப்பட்ட மாவட்ட குழுக்கள் தான் பொறுப்பேற்க வேண்டும் 
-  தனிப்பிரிவு ஏற்படுத்தும் பணியை மூன்று மாதத்தில் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

 

இந்த உத்தரவை குறிப்பிட்ட காலத்திற்கு நிறைவேற்றவில்லை என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முயற்சிகள் முன்னணியின் மாநில செயலாளர் 2017ஆம் ஆண்டு தமிழக உள்துறை செயலாளருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி எம்.சத்தியநாராயணன் விசாரித்துவரும் நிலையில் உள்துறை செயலாளர் தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

அந்த பதில் மனுவில் (1) அப்போதைய செக்காணூரனி காவல் ஆய்வாளர் சுகுமார், உசிலம்பட்டி உதவி ஆய்வாளர் ராணி, வத்தலகுண்டு ஆய்வாளர் வினோஜ், துணை ஆய்வாளர் ஆனந்தி ஆகியோரின் ஊதிய உயர்வை மூன்றாண்டுகளுக்கு நிறுத்திவைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

(2) மேலும் புகார்களை பெறுவதற்கு அனைத்து மாவட்டங்கள் மற்றும் நகரங்களில் காவல்துறை, சமூக நலத்துறை, ஆதிதிராவிட நலத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுக்கள்  அமைக்கபட்டுள்ளது .

(3) அனைத்து மாவட்டங்கள், நகரங்களில் 24 மணி நேர அடிப்படையில் 1091, 1077 உள்ளிட்ட உதவி எண்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

(4) இணையதளம் மற்றும் செயலி மூலம் புகார் அளிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அதை சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு அனுப்ப அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். அதன்பின்னர் ஆரம்பகட்ட விசாரணை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்வது குறித்து காவல்துறை முடிவெடுப்பார்கள். 

(5) மாவட்ட வாரியான பிரிவுகள் கண்காணிப்பது

(6) தம்பதி, பெற்றோருக்கு கலந்தாய்வு வழங்குவது 
(7) தம்பதிகளுக்கு இருப்பிட வசதி ஏற்படுத்துவது தொடர்பாக அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மாநகர காவல் ஆணையர்களுக்கு 10.02.2017ல் டிஜிபி அலுவலகத்திலிருந்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

(8) சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், திருவாரூர், தேனி, சிவகங்கை மாவட்டங்களில் தமிழ்நாடு சமூக நல வாரியத்தின் மூலமாக தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றனர்.

(9) தம்பதிகளை பாதுகாக்க தவறிய காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறை கண்காணிப்பாளர்கள், ஆணையர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே நீதிமன்ற உத்தரவை முழுமையாக நிறைவேற்றியுள்ளதால் தமிழக அரசு அதிகாரிகள் மீதான நீதிமன்ற அவமதிபு வழக்கை முடித்து வைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.இதையடுத்து வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்து  நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; மனைவியின் வினோத கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்ததால் விபரீத முடிவு!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Disappointing results deny the wife's strange request on extramarital affair in UP

உத்தரப் பிரதேசம் மாநிலம், கோரக்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராம் கோவிந்த். கூலித்தொழிலாளியான ராம் கோவிந்தின் மனைவி கவிதா (34, பெயர் மாற்றப்பட்டுள்ளது). திருமணமான 7 ஆண்டுகள் ஆன இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். 

இந்த நிலையில், கவிதாவுக்கு பக்கத்து ஊரைச் சேர்ந்த இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம், கவிதாவின் கணவர் ராம் கோவிந்துக்கு தெரிய வந்துள்ளது. இதனால், கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

இதில் மனமுடைந்த கவிதா, நேற்று முன் தினம் (03-04-24) தனது வீட்டு முன் உள்ள உயரழுத்த டிரான்ஸ்பார்மர் கம்பத்தில் ஏறியுள்ளார். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள், கவிதாவை கீழே இறங்குமாறு கூறியுள்ளனர். இதற்கு கவிதா மறுப்பு தெரிவித்து கம்பத்தில் ஏறியவாறு இருந்ததால், உடனடியாக இந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், உயரழுத்த டிரான்ஸ்பார்மர் கம்பத்தில் ஏறி அந்த பெண்ணை பத்திரமாக மீட்டனர். இதனை, அங்கிருந்த ஒருவர், தனது செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

இதனையடுத்து, கீழே வந்த கவிதாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், கவிதா தனது ஆண் நண்பரை தனது வீட்டில் தங்க வைக்க அனுமதிக்குமாறு தனது கணவரிடம் கோரிக்கை வைத்துள்ளார். இந்த வினோத கோரிக்கைக்கு ராம் கோவிந்த் மறுப்பு தெரிவித்து சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதன் காரணமாக அந்த பெண், டிரான்ஸ்பார்மர் கம்பத்தில் ஏறி தற்கொலை முயற்சி செய்துள்ளதாக தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

31 வது முறையாக நீட்டிப்பு; நீதிமன்றம் அதிரடி

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Extension for the 31st time; Court action

போக்குவரத்துத்துறையில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். மேலும் செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாக்களான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு. முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புதியதாக மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வரும் நிலையில்  இன்று நடைபெற்ற விசாரணைக்கு பிறகு மேலும் 15 நாட்களுக்கு செந்தில் பாலாஜிக்கான நீதிமன்ற காவலை 31 ஆவது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி டி.வி.ஆனந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.