![dindigul eramanaickenpatti construction worker incident](http://image.nakkheeran.in/cdn/farfuture/PEftDqb2CVcG5qtFvqtvSW-Xn8Nvepea9jxWet9wUao/1676351732/sites/default/files/inline-images/DINDIGUL-ART.jpg)
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ள சீவல் சரகை சேர்ந்தவர் கருப்புசாமி. சென்ட்ரிங் வேலை செய்து வரும் இவர் திண்டுக்கல் - கரூர் சாலையில் உள்ள எரமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த கட்டட தொழிலாளியான ஈஸ்வரியை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் கடந்த மூன்று வருடங்களாக கருப்புசாமி தனது மனைவியின் சொந்த ஊரான எரமநாயக்கன்பட்டியில் வசித்து வருகிறார். இவருக்கும் எரமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ஒரு சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று மது அருந்துவதற்காக கருப்புசாமி எரமநாயக்கன்பட்டி பிரிவில் உள்ள மதுக்கடைக்கு சென்று மது வாங்கி வந்து சந்தானவர்த்தினி ஆற்றுக்கு அருகில் உள்ள கழிவு நீர் ஓடை அருகே அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர் கருப்புசாமியின் கழுத்தை அறுத்து படுகொலை செய்து அருகில் உள்ள கழிவு நீர் ஓடையில் உடலை வீசி விட்டுச் சென்றுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திண்டுக்கல் டவுன் டிஎஸ்பி கோகுலகிருஷ்ணன் தலைமையில் திண்டுக்கல் வட்டம் இன்ஸ்பெக்டர் பாலாண்டி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெய்கணேஷ், மலைச்சாமி மற்றும் போலீசார் கருப்புசாமியின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் ரூபி வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய் ரூபி சம்பவ இடத்திலிருந்து அருகில் உள்ள சந்தனவர்த்தினி ஆறு வரைக்கும் சென்ற பின் நின்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. எதற்காக இந்த படுகொலை சம்பவம் நடைபெற்றது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலை செய்து தப்பி ஓடிய மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.