Skip to main content

ஆயுள் தண்டனை கைதியைச் சித்ரவதை செய்த போலீஸ்; டிஐஜி, எஸ்பி மீது பாய்ந்த நடவடிக்கை

Published on 23/10/2024 | Edited on 23/10/2024
DIG and sp suspended for beating on a life sentence prisoner

கிருஷ்ணகிரி மாவட்டம் மாணிக்கம்கோட்டை பகுதியைச் சேர்ந்த சிவக்குமார்(30) கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்தநிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலூர் சரக சிறைத்துறை டிஐஜி வீட்டு வேலைகள் செய்வதற்காக வேலூர் மத்திய சிறையில் இருந்து சிவக்குமாரை, சிறைத்துறை வார்டன்கள் அழைத்துச் சென்றுள்ளனர்.

அப்போது அவர் வீட்டில் இருந்த பணம், வெள்ளி பொருட்களை திருடியதாக கூறி சிறை வார்டன்கள், காவலர்கள் சிறையில் தனி அறையில் அடைத்து சித்ரவதை செய்ததாகக் கூறப்பட்டது. இதுதொடர்பாக சிவக்குமாரின் தாயார் கலாவதி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த நீதிபதிகள் இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டனர். 

அதன்பேரில் சிபிசிஐடி போலீசார் வேலூர் சரக சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி, வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர்(SP) அப்துல் ரகுமான், ஜெயிலர் அருள்குமரன் உள்பட 14 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். அப்போது கைதி சிவக்குமார் தாக்கப்பட்டது உறுதியான நிலையில் ஆயுள்தண்டனை கைதி சிவக்குமார் சேலம் மத்திய சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

இதற்கிடையே வேலூர் சரக டிஐஜி ராஜலட்சுமி காத்திருப்போர் பட்டியலுக்கும், ஜெயில் சூப்பிரண்டு அப்துல் ரகுமான் சென்னை புழல்-2 சிறைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக அங்கு பணியாற்றிய பரசுராமன் வேலூர் ஜெயில் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார். 

இதுதொடர்பான வழக்கு விசாரணை நேற்று முன்தினம்(21.8.2024) சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்றபோது நீதிபதிகள் இந்த வழக்கில் உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது என்று கேள்வி எழுப்பினர். இந்த நிலையில், வேலூர் சரக முன்னாள் டிஐஜி ராஜலட்சுமி, ஜெயில் சூப்பிரண்டு அப்துல்ரகுமான், ஜெயிலர் அருள்குமரன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெவித்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்