Skip to main content

சொத்துக்காக தாய், தந்தையை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்ற மகன்! - குடிபோதையில் வெறிச்செயல்!

Published on 07/03/2021 | Edited on 07/03/2021

 

DHARMAPURI INCIDENT PARENTS AND SON POLICE INVESTIGATION

 

தர்மபுரி அருகே, சொத்துக்காகக் குடிபோதையில் தாய், தந்தையை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்ற மகனை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள இண்டூர் பூச்சட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (65). இவருடைய மனைவி சின்னராஜி (60). இவர்களுடைய மகன் ராமசாமி (40). இருசக்கர வாகன மெக்கானிக். சரிவர வேலைக்குப் போகாமல் இருந்தார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். ராமசாமிக்கும் அவருடைய பெற்றோருக்கும் இடையே கடந்த சில ஆண்டாகச் சொத்துத் தகராறு இருந்துவருகிறது. 

 

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 5) இரவு அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. மதுபோதையில் வீட்டுக்கு வந்திருந்த ராமசாமி, தனக்குச் சேர வேண்டிய பாகத்தைப் பிரித்துக் கொடுக்கும்படி பெற்றோரிடம் கேட்டுத் தகராறில் ஈடுபட்டுள்ளார். அதற்குப் பெற்றோர் மறுத்துள்ளனர்.

 

இதனால், ஆத்திரம் அடைந்த ராமசாமி, கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கீழே கிடந்த இரும்புக் கம்பியை எடுத்து, பெற்றோரை சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் தாய், தந்தை இருவரும் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கொஞ்சம் நேரம் கழித்துப் போதை தெளிந்துள்ளது. கோபத்தில் பெற்றோரை அடித்துக் கொன்று விட்டோமே எனப் பதற்றம் அடைந்த ராமசாமி, இண்டூர் காவல் நிலையத்திற்கு அவராகவே நேரில் சென்று, பெற்றோரை கொன்று விட்டதாகக் கூறி சரணடைந்தார். 

 

இதையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலங்களைக் கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராமசாமியையும் கைது செய்தனர். சொத்துக்காக குடிபோதையில் தாய், தந்தையை அடித்துக் கொன்ற சம்பவம் இண்டூர் பூச்சட்டி கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

18 மாவோயிஸ்டுகள் பலி; சத்தீஸ்கரில் பரபரப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் மொத்தமாக 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மொத்தமாக 18 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், மெஷின் கன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒரே ஒரு எல்லை பாதுகாப்பு வீரரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பதாகவும் ஆனால் உயிருக்கு எந்தவிதமான சேதம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்திற்கு முன்பாக நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 18 மாவோயிஸ்டுகள் கொலை செய்யப்பட்டிருப்பது முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.  நக்சலைட்டுகள் ஆதிக்கம்  அதிகம் இருக்கும் சத்தீஸ்கரில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.