Skip to main content

மார்பில் கத்தி போட்டவாறு கோவிலுக்கு அழைத்து வந்த பக்தர்கள்!

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
Devotees brought to the temple with knives in their chests

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தொகுதியில் உள்ள சின்னாளபட்டி  கீழக்கோட்டை பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீமது இராமலிங்க  சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவில். பழம் பெருமை வாய்ந்த இக்கோவிலின்  பெரிய கும்பிடு விழாவை முன்னிட்டு கணபதி ஹோமம் நடைபெற்றது.  அதன்பின்னர் முகூர்த்தகால் ஊன்றுதல், கங்கணம் கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து மாலை அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்ய  விரதம் இருந்து காப்புக்கட்டிக்கொண்ட பக்தர்கள் பாரதிநகர் பிள்ளையார்  கோவிலிலிருந்து பால்குடங்களை சுமந்தவாறு வந்து அம்மனுக்கு பாலாபிஷேகம்  செய்தனர். அதன்பின்னர் செவ்வாய்கிழமை அம்மன் கரகம் எடுக்க விரதம் இருந்த  பக்தர்கள் கோவில் முன்பு வந்தனர். அப்போது ஜமீன்தார் அழைப்பு நிகழ்ச்சி  நடைபெற்றது.

ஜமீன்தார் முத்துராஜாவை கோவில் கமிட்டி நிர்வாகிகள் மாலை  அணிவித்து கோவிலுக்கு அழைத்து வந்தனர். கோவிலுக்கு வந்த ஜமீன்தார் அசுவ  வாகனத்தை (குதிரை) தானமாக கொடுக்க ஜமீன்தாருடன் கோவில்  கமிட்டியார்கள், பக்தர்கள் அம்மனை அழைத்து வர பிருந்தாவன தோப்பிற்கு  சென்றனர். அங்கு அம்மன் கரகம் மல்லிகைப்பூ வைத்து அலங்காரம் செய்யப்பட்டது. அப்போது அம்மன் கரகம் முன்பு பெண்கள் முளைப்பாரி வைத்து கும்மியடித்தனர். அதனை தொடர்ந்து அம்மன் கரகம் முன்பு கத்தி போடும்  நிகழ்ச்சி நடைபெற்றது.

Devotees brought to the temple with knives in their chests

ஜாதி மான் முதலில் கத்திபோட அதன்பின்னர்  செவ்வலேர் வம்சத்தை சேர்ந்த தேவாங்கர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் கத்தி  போட்ட பின்பு தேவாங்கர் சமுதாயத்தை சேர்ந்த பல்வேறு தரப்பினர் தங்கள்  மார்பில் கத்தி போட்டவாறு சௌடம்மா தீசிக்கோ! சௌடம்மா தீசிக்கோ!! சௌடம்மா தீசிக்கோ!!! என சொல்லி இரத்தம் சொட்ட சொட்ட தங்கள் மார்பு மீது  கத்தி போட்டவாறு அம்மனை அழைத்தனர். அதனை தொடர்ந்து ஜமுதாவி  அம்மனை போல் அலங்கரித்த கரகத்தை குதிரை மீது வைத்து அம்மன்  கரகத்துடன் ஊர்வலமாக அழைத்து வந்தனர். அம்மன் கரகம் பிருந்தாவன  தோப்பில் இருந்து புறப்பட்டு கஸ்தூரிபா மருத்துவமனை சாலை, பூஞ்சோலை,  தேவாங்கர் பள்ளி சாலை, பொம்மையசாமி கோவில் தெரு, கடைவீதி வழியாக  கோவிலை வந்தடைந்தது. அசுவ வாகனத்தில் அமர்ந்தவாறு அம்மன்  கோவிலுக்கு வந்தபோது ஓம்சக்தி, பராசக்தி, என்று பக்தர்கள் கோஷமிட்டனர். அதன்பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.  கோவிலில் சக்திசேர்க்கும் போது தேவாங்கர் சமுதாயத்தைச் சேர்ந்த சிறுவர்கள்  முதல் பெரியவர்கள் வரை தங்கள் மார்பில் கத்தி போட்டு அம்மனை வழிபாடு  செய்தனர். 

விழாவிற்கான ஏற்பாடுகளை கீழக்கோட்டை தேவாங்கர் மகாஜனசபை  நாட்டாமை வழக்கறிஞர் பி.வாசுதேவன், பெத்தனகாரர் எஸ்.முருகன், தலைவர்  ஏ.இராமலிங்கம், செயலாளர் எம்.முருகன், பொருளாளர் மீனாட்சிசுந்தரம்,  துணைச்செயலாளர்கள் புவனேந்திரன், இணைபொருளாளர் வி.பெருமாள்,  இணைச்செயலாளர் கே.கனகராஜ், தேவாங்கர் இளைஞர் அணியை சேர்ந்த தலைவர் சி.தேவா, வி.வீரேஸ்குமார், எஸ்.கோபிநாத், இணைத்தலைவர் தினேஷ்  குமார், இணைச்செயலாளர் விமல்குமார், மற்றும் சவடம்மன் கோவில் பூசாரி  ஏ.எஸ்.கனேசன் சாஸ்திரி, துர்கைஅம்மன் கோவில் பூசாரி கே.எம்.முருகன், கரகம் எடுக்கும் பூசாரி கார்த்திக், அஸ்வவாகனத்தில் ஜமுதாடு பெட்டி அழைத்து வரும் ஜாதிப்பிளை எஸ்.சரவணன் தலைமையிலான விழா கமிட்டியார்கள்  சிறப்பாக செய்திருந்தனர். விழாவை முன்னிட்டு கோவில் வளாகம் முழுவதும்  மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பேருந்து நிலையம் அருகே உள்ள விஜயமஹாலில் நடைபெற்ற மாபெரும் அன்னதானத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று சிறப்பித்தனர்! 

சார்ந்த செய்திகள்

 

Next Story

நூற்றாண்டு கண்ட சித்தநாதன் பஞ்சாமிர்த கடை இடிப்பு

Published on 01/07/2024 | Edited on 01/07/2024
Demolition of century-old Siddhanathan Panchamirtha shop

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் உத்தரவிட்டிருந்தது. அதன்படி ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை அதிகாரிகள் காவல்துறை பாதுகாப்புடன் மேற்கொண்டு வருகின்றனர்.

பழனி அடிவாரத்தில் உள்ள அண்ணா செட்டிமடம் பகுதியில் உள்ள குடியிருப்புகளை அகற்றக் கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் அடிவாரத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட கடைகள் குடியிருப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் அந்தப் பகுதியில் வசித்து வந்தவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்பட்டு குடியிருப்புகள் இடிக்கப்பட்டு வருகிறது. 120 குடியிருப்புகள் மற்றும் கடைகளை அகற்றும் பணி நடைபெற்றது. படிப்பாதை அருகே நூறாண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த பிரசித்தி பெற்ற சித்தநாதன் பஞ்சாமிர்தம் கடையும் இடித்து அகற்றப்பட்டது.

Next Story

கோவிலில் யாகம் வளர்த்த பக்தர்கள்; விரட்டி விரட்டி கொட்டிய தேனீக்கள்

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
Devotees who raised sacrifices in the temple; Banished bees

கரூர் மாவட்டம் அருகே உள்ளது நெரூர் பகுதி இந்தப் பகுதியில் பழமை வாய்ந்த பெருமாள் கோவில் ஒன்று உள்ளது. இந்த நிலையில் இந்தக் கோவிலில் வழிபாடு நடத்துவதற்காக கும்பகோணத்தில் இருந்து ஆறு பக்தர்கள் அந்தக் கோவிலுக்கு வந்துள்ளனர். இதனால் கோவிலில் யாகம் செய்து பூஜை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதற்காக யாக குண்டம் அமைக்கப்பட்டு யாகம் வளர்க்கப்பட்டது. தீயில் உருவான புகை கோயில் முழுக்க பரவியது. அப்பொழுது கோவில் வளாகத்திலேயே இருந்த மரத்தில் தேன்கூடு ஒன்று இருந்தது. அதிகப்படியான புகையால் தேன் கூட்டில் உள்ள தேனீக்கள் கிளம்பின.

கோவிலில் இருந்த பக்தர்கள் அனைவரையும் தேனீக்கள் கொட்ட தொடங்கியது. உடனடியாக அனைவரும் கோவிலுக்கு உள்ளேயே ஒளிந்து கொண்டனர். தொடர்ந்து கரூர் தீயணைப்பு துறை எனக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக அங்கு வந்த தீயணைப்பு படையினர் பாதுகாப்பு உடை, முக கவசம் ஆகியவற்றை அணிந்து கொண்டு உள்ளே சென்று பக்தர்களை சலனமில்லாமல் ஒவ்வொருவராக வெளியே கொண்டு வந்தனர். மீட்கப்பட்ட அனைவரும் கரூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். யாகம் வளர்த்த புகையால் தேன் கூட்டிலிருந்து தேனீக்கள் கிளம்பி, கொட்டிய சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.