
விஜய் டி.வி.யில் ஒளிப்பரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் சித்ரா (28). திருவான்மியூரைச் சேர்ந்த இவர் நசரத்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்து தொடரில் நடித்து வந்தார். இந்த நிலையில், திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஹேம்நாத்துடன் ஹோட்டல் அறையில் தங்கியிருந்த போது, நடிகை சித்ரா நேற்று முன்தினம் (09/12/2020) தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

இதனிடையே சித்ராவின் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த நசரத்பேட்டை காவல்துறையினர் சித்ராவின் கணவரான ஹேம்நாத்திடம் தொடர்ந்து மூன்றாவது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலைக்கு அவரது கணவர், தாயார் கொடுத்த மன அழுத்தமே காரணம். ஹேம்நாத் குடித்துவிட்டு சின்னத்திரை படப்பிடிப்புக்குச் சென்று சித்ராவுடன் சண்டையிட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதேபோல், ஹேம்நாத்தைப் பிரிந்து வருமாறு தாய் விஜயா தொடர்ந்து கூறியதால், சித்ராவுக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. சித்ராவின் செல்ஃபோனில் இருந்த எஸ்.எம்.எஸ்., புகைப்படங்கள், ஆடியோ உள்ளிட்ட ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளது. ஆதாரங்கள் அழிக்கப்பட்டதால் சைபர் ஆய்வகத்துக்கு, சித்ராவின் செல்ஃபோன் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்று காவல்துறை வட்டாரத் தகவல் கூறுகின்றன.

இந்நிலையில், விசாரணையில் சித்ரா தற்கொலை குறித்து முன்னுக்குப்பின் முரணான தகவல்களை, ஹேம்நாத் கூறியதாகக் கூறப்படும் நிலையில், நசரத்பேட்டை காவல் நிலையத்தில் ஹேம்நாத்திடம் அம்பத்தூர் துணை ஆணையர் தீபா சத்யன் நேரில் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறார்.