Skip to main content

கடல்நீர் புகுந்து விவசாய நிலங்கள் சேதம்; நிவாரணம் வழங்க வேண்டும் - முக்குலத்துப் புலிகள் கோரிக்கை

Published on 27/10/2022 | Edited on 27/10/2022

 

Demand provide relief agricultural lands affected sea water

 

நாகை மாவட்ட கடற்கரையோர கிராமங்களில் கடல்நீர் உட்புகுந்து விளைநிலங்களை முற்றிலுமாக பாதிப்புக்குள்ளாக்கியிருப்பதை கவனத்தில் கொண்டு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என முக்குலத்துப் புலிகள் கட்சியின் நிறுவனத் தலைவர் ஆறு.சரவணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

"பங்களாதேஷ் நாட்டில் கரையைக் கடந்த சிட்ராங் புயல் வங்கக் கடலில் நிலை கொண்டு இருந்தபோது தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்ட கடற்கரைப் பகுதிகளான பிரதாபராமபுரம், காமேஸ்வரம், விழுந்தமாவடி, புதுப்பள்ளி உள்ளிட்ட கடற்கரையோர கிராமங்களின் விளைநிலங்களில் கடல் நீர் உட்புகுந்து கடும் சேதத்தை ஏற்படுத்தி விவசாயிகளை பாதிப்புக்குள்ளாக்கியிருக்கிறது. இதற்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்கி விவசாயிகளைக் காத்திட வேண்டும்.  

 

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே பயிரிடப்பட்ட அனைத்துப் பயிர்களுமே பெரும் மழை வெள்ளத்தினால் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு விவசாயிகளை நிமிரச் செய்யாதபடி கடனாளிகளாக்கியிருக்கிறது. கடன் வாங்கி அண்டா,குண்டாக்களை அடகு வைத்து பயிர்கள் பாதிக்கப்பட்டால் காப்பீட்டுத் தொகையாவது, கடனுக்கு ஈடுசெய்ய உதவும் என காப்பீடு செய்தனர். இரண்டு ஆண்டுகளாக பெரும் மழை வெள்ளத்தால் பயிர்கள் முழுமையாகப் பாதிக்கப்பட்டும் காப்பீட்டு நிறுவனங்களோடு அதிகாரிகளும் கைகோர்த்துக்கொண்டு பயிர் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகை வழங்காமல் முறைகேடு செய்துள்ளனர்.

 

இப்படிப்பட்ட கையறு நிலையில் இருக்கும் விவசாயிகளுக்கு கடல் நீரால் பேராபத்து சூழ்ந்துவிட்டது. எனவே சேதமடைந்த நிலங்களுக்கு தமிழக அரசு உடனடி நிவாரணம் வழங்க முன்வர வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்