சிதம்பரத்தில் உள்ள கொள்ளிடம் வடிநில கோட்டம் நீர்வளத்துறை அலுவலகத்தில் கீழணை மற்றும் வீராணம் ஏரியிலிருந்து இந்த வருடத்திற்கான சம்பா சாகுபடிக்குத் தண்ணீர் திறப்பதற்கான விவசாயிகள் மற்றும் விவசாய சங்கத் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு கொள்ளிடம் வடிநிலக்கோட்ட செயற் பொறியாளர் கு. காந்தரூபன் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் கீழணை மற்றும் வீராணம் ஏரி பாசன விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெருவாரியாகப் பங்கேற்றுப் பேசினர். கீழணை மற்றும் வீராணம் ஏரி பாசனப் பரப்பு 1,31,903 ஏக்கர் பாசன வசதி பெறும் பொருட்டு வருகிற 20.09.2023 தேதிக்கு மேல் பாசனத்திற்குத் தண்ணீர் திறப்பது என விவசாய பெருமக்கள் பெருவாரியான அளவில் கருத்து தெரிவித்தனர்.
கலந்தாய்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்பட்டு தண்ணீர் திறந்து விடப்படும் நாள் பின்னர் அறிவிக்கப்படும். என காந்தரூபன் தெரிவித்தார். பின்னர் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் கடைமடைப் பகுதியில் வாய்க்கால்களைத் தூர் வார வேண்டும். குடிமராமத்துப் பணி மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். கூட்டத்தில் வீராணம் ஏரி ராதா வாய்க்கால் பாசன சங்கத் தலைவர் ரங்கநாயகி மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் ராமச்சந்திரன், கற்பனை செல்வன், கண்ணன், அப்பு சத்தியநாராயணன், மதிவாணன், உதவி செயற்பொறியாளர்கள் ஞானசேகர், கொளஞ்சிநாதன், உதவிப் பொறியாளர்கள் ரமேஷ், வெற்றிச்செல்வன், புகழேந்தி, பாலச்சந்திரன், கௌதமன், வேளாண்துறை அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பொதுப்பணித்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.