Skip to main content

கருக்கலைப்பு செய்த கர்ப்பிணி பெண் மரணம்; நாட்டு வைத்தியர் கைது..!

Published on 02/08/2017 | Edited on 02/08/2017
கருக்கலைப்பு செய்த கர்ப்பிணி பெண் மரணம்;
நாட்டு வைத்தியர் கைது..!


ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் வட்டம், கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள தொண்டுர் என்ற ஊரை சேர்ந்தவர் காளியப்பன்(வயது-40). விவசாயத் தொழிலாளியான இவர் மனைவி செல்வி(வயது-35) என்பவர் கடந்த ஆண்டு மே மாதம், உடல் நலம் குன்றினார்.

மருத்துவ சிகிச்சைக்காக முதலில் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையிலும் பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்ந்த நிலையில் அவர் உயிரிழந்தார்.

அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட உடற்கூறு ஆய்வறிக்கையில், செல்விக்கு கருக்கலைப்புக்காக நாட்டு வைத்தியம் பார்த்ததால் தான் அவரது உடல்நிலை பாதித்ததும், அதன் மூலமே அவருக்கு உயிரிழப்பு ஏற்பட்டதும் தெரிந்தது.

இதனால், செல்வி மரணமடைந்ததை கொலை வழக்காக மாற்றிய கடம்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுவந்தனர். விசாரணையில், கருவுற்றிருந்த செல்விக்கு தொண்டூரை சேர்ந்த தைலம்மாள்(வயது-65) என்ற பெண் நாட்டு வைத்தியத்தின் மூலம் கருக்கலைப்பு செய்தது தெரிந்தது. இதையடுத்து, அவரை கடம்பூர் போலீசார் கைது செய்து, நேற்று கோபி இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

- பெ.சிவசுப்பிரமணியம்

சார்ந்த செய்திகள்