Skip to main content

''அப்பப்பா என்னா வெயிலு... தாங்க முடியலப்பா'- காணாமல் போன கை ஏற்றம், கவலை ஏற்றம்!

Published on 04/05/2022 | Edited on 04/05/2022

 

pudukottai

 

தமிழ்நாட்டில் ஆறுகளில் உள்ள மணலையும் காடுகளில் உள்ள மரங்களையும் கொஞ்சம் கொஞ்சமாக கொள்ளை கொண்டுபோன பிறகு கிட்டத்தட்ட 30, 40 வருஷத்துக்கு முன்னால் இருந்த கையேற்று, கவலை ஏற்றம் எல்லாமே காணாமல் போய் ஆயிரம் அடி ஆழத்திற்கு தண்ணீர் போய்விட்டது. ஆழ்குழாய் கிணறு அமைத்து கரண்ட் மோட்டாரை இறக்கி பட்டனை தட்டினால்தான் தண்ணீர் வந்து ஊற்றுகிறது. நிலத்தடி நீர் கீழே போகப்போக கையேற்று, கவலை ஏற்றங்களுக்கு தேவையான உருளைகட்டை, கயிறு, வாளி, காளை மாடுகளும் காணாமல் போய்விட்டது. இவையெல்லாம் அரிய பொருட்களின் படங்களாக தான் இப்போது காணமுடிகிறது. அந்தப் படங்களைப் பார்த்தாலும் அதற்கான நீண்ட விளக்கமும் சொல்ல வேண்டியுள்ளது.

 

புதுக்கோட்டை மாவட்டம் வறட்சி மாவட்டமாக இருந்தாலும் ஆலங்குடிக்கு கிழக்கே ஆழ்குழாய் கிணறு அமைத்து விவசாயம் நடக்கிறது. அதிலும் சில வருடங்களாக தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆனால் ஆலங்குடி - வடகாடு சாலையில் உள்ள கோயில்பட்டி கிராமத்தில் சில வருடங்களுக்கு முன்பே 300, 400 அடி ஆழ்குழாய் கிணறுகளில் கூட தண்ணீர் நின்றுவிட்டது. ஆனால் அதே ஊரில் உள்ள ஒரு பழைய செம்புரான் கல் கட்டிய கிணற்றில் ஒரு நாளும் தண்ணீர் வற்றியதில்லையாம். 20 அடி ஆழத்தில் பால் போல தண்ணீர் கிடக்கிறது.

 

சித்திரை கத்திரி வெயிலின் தாக்கத்தோடு வேகமாக வந்த 87 வயது நல்லதம்பி தாத்தா... ''அப்பப்பா என்னா வெயிலு, தாங்க முடியலப்பா'' என்று சொல்லிக் கொண்டே கிணற்றுப் பக்கம் போய் தோளில் போட்டு வந்த சின்னத் துண்டை கோவணமாக கட்டிக்கொண்டு கரையில் இருந்த வாளியை கிணற்றுக்குள் இறக்கி வேகவேகமா தண்ணீரை எடுத்து தலையில் ஊற்றிக் கொண்டு அங்கே கிடந்த கல்லில் கையோடு கொண்டு வந்த சட்டையை துவைத்தார்.

 

pudukottai

 

என்னங்கய்யா வேகமாக வந்தீங்க இப்படி நின்னு குளிக்கிறீங்களே என்றோம்..

 

எனக்கு 87 வயசாகுது தம்பி, கிட்டத்தட்ட 70 வருசமா இந்த கிணத்துல தான் தண்ணி இறைச்சு குளிக்கிறேன். மோட்டார்லயும், குளத்துலயும் குளிப்பேன் ஆனா இந்த கிணத்துல குளிக்கிற சுகம் வேற எதுலயும் கிடைக்கிறதில்லை. ஊரெல்லாம் போர் கேணியில தண்ணி இல்லன்னு சொன்னப்ப கூட இந்த கேணியில தண்ணி வற்றலயே. பால் மாதிரி தண்ணி வரும். டவுன்ல தனி ரூமுக்குள்ள குளிக்கிறதைவிட இப்படி குளிக்கிறது எனக்கு புடிக்கும்'' என்றார் நல்லதம்பி தாத்தா.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடைசிவரை பேச்சுவார்த்தை தோல்வி; இறுதிவரை புறக்கணித்த இறையூர் மக்கள்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் தமிழ்நாட்டிலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் அதிகமான கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்பு பதாகைகளை காண முடிந்தது. அதேபோலதான் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி, முத்துக்காடு ஊராட்சி, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை குடி தண்ணீர் தொட்டியில் மனித கழிவு கலந்த உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரி தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக 502 வாக்காளர்களைக் கொண்ட இறையூர் கிராம மக்கள் பதாகை வைத்தனர்.

அதேபோல இதேகோரிக்கையை வலியுறுத்தி 59 வாக்காளர்களை கொண்ட வேங்கை வயல் கிராம மக்களும் தேர்தல் புறக்கணிப்பு பதாகை வைத்தனர். இந்த பகுதிக்கு எந்த ஒரு வேட்பாளரும் வாக்கு கேட்டு வரவில்லை. திருச்சி நாடாளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மட்டும் வந்து சென்ற நிலையில் அவர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இறையூர் மற்றும் வேங்கை வயல் கிராமங்களில் உள்ள 561 வாக்காளர்கள் வாக்களிக்க வேங்கைவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குப்பதிவு மையத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில், காலை முதல் வாக்குப் பதிவிற்கு அதிகாரிகள் காத்திருந்த நிலையில் அரசு ஊழியர் வாக்கு ஒன்று பதிவானது, தொடர்ந்து இந்த வாக்குச் சாவடியில் வாக்களிக்க காவேரி நகர் உள்ளிட்ட வெளியூரில் இருந்த சிலர் வந்து வாக்களித்தனர். மதியம் வரை 6 வாக்குகள்  மட்டுமே பதிவாகி இருந்தது.

nn

இரு கிராம மக்களும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். திருச்சி பாராளுமன்றத் தொகுதிக்குட்ட பகுதி என்றபதால் மாலை திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் வந்த அதிகாரிகள் வேங்கைவயல் கிராம மக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர், அப்போது தண்ணீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும். எங்களுக்கு தனியொரு இடத்தில் குடியிருப்பு பகுதி ஏற்படுத்தி வீடுகள் கட்டித்தர வேண்டும், வாழ்வாதாரத்திற்கு விளைநிலம், தொழில் வசதி செய்து தர வேண்டும் என்று பல கோரிக்கைகள் முன் வைத்தனர். இதனைக் கேட்ட அதிகாரிகள் வழக்கு சம்மந்தமாக சிபிசிஐடி விசாரணை நடக்கிறது உங்களுக்கே தெரியும் விரைவில் கைது செய்வார்கள். மற்ற கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம் அதனால் வாக்குப்பதிவு செய்யுங்கள் என்று கூறினர். அதனையடுத்து மாலை 5 மணிக்கு பிறகு வேங்கைவயல் மக்கள் 59 வாக்காளர்களில்  53 பேர் இரவு 7 மணி வரை வாக்களித்தனர்.

அதேபோல இறையூர் கிராம மக்களிடம் அதிகாரிகள் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு சென்ற போது, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்யும் வரை எந்த தேர்தலிலும் வாக்களிக்க மாட்டோம் என்று கூறிவிட்டனர். சொன்னது போல முழுமையாக வாக்குப் பதிவை புறக்கணித்துவிட்டனர். இறையூர் கிராம மக்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. வேங்கைவயல் மக்களின் 53 வாக்குகளுடன் சேர்த்து மொத்தமே 62 வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்து இறையூர் மக்கள் முழுமையாக தேர்தலை புறக்கணித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேங்கை வயல் கிராம தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கும் வரை அனைத்து தேர்தல்களையும் புறக்கணிப்போம் என்பதில் இறையூர் கிராம மக்கள் ஒருங்கிணைந்து நிற்கிறோம் என்கின்றனர் இறையூர் மக்கள்.

Next Story

‘பகல் 12 முதல் 3 வரை வெளியே வர வேண்டாம்’ - மதுரை மக்களுக்கு அறிவுறுத்தல்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Advice to Madurai people Don't come out between 12 noon and 3 am

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. 

இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மதுரை மாவட்ட மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “வெயில் அதிகரிப்பு காரணமாக மதுரையில் பகல் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம். வெயில் தாக்கம் மற்றும் அனல்காற்று அதிகமாக வீசுவதால் மக்கள் முன்னெச்சரிக்கயாக இருக்க வேண்டும்.

அதாவது, வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் கால்நடைகளை அனுமதிக்கக் கூடாது. தாகம் எடுக்காவிட்டாலும் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். பழச்சாறுகள் அருந்த வேண்டும். அவசர கால தேவைகளுக்கு 1077 மற்றும் 1070 ஆகிய இலவச அழைப்பு எண்களை தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்தார்.