Skip to main content

கடலூர்- மூன்றாண்டுகளாக முடிக்கப்படாத சாலையால் அவதி!!

Published on 30/08/2018 | Edited on 30/08/2018

 

 

மூன்று ஆண்டுகள் கடந்தும்  முடிக்கப்படாத சாலையால் வாகன ஓட்டிகள்,  பொதுமக்கள் அவதி,   பாதி வேலையில் நிற்கும் பாலங்களால் விபத்து எற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்திலிருந்து பரங்கிப்பேட்டையை இணைக்கும் நெடுஞ்சாலைக்கான பணி கடந்த 20.07.2015 அன்று தொடங்கப்பட்டது. தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தரம் உயர்த்தப்பட்ட மாநில நெடுஞ்சாலையான இச்சாலையானது சுமார்  64 கிலோ மீட்டர் தொலைவினலானது.  இச்சாலை பணிக்காக தமிழ்நாடு அரசு மற்றும் உலக வங்கியின் மூலம் பெற்ற கடன் உதவி என  162 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் பெங்களுரை சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு 17.01.2018 க்குள் முடித்துவிட காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது. அந்த நிறுவனத்தினர் அதே சாலையில் வளையமாதேவியில் முகாமிட்டு சாலை பணிகளை செய்து வந்தனர்.

 

 

கடலூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு துறைமுகங்களில் ஒன்று பரங்கிப்பேட்டையில் அமைந்துள்ளது. இதனால் விருத்தாசலம் வழியாக  சேலம், திருச்சி மற்றும் பெங்களூர் போன்ற பெரு நகரங்களுக்கு,  கடல்வழி மூலம் ஏற்றுமதி, இறக்குமதி செய்வதற்கு பெரிதும் வழிவகுக்கும் என்று அமைக்கபட்ட இந்த சாலை பணிகள் இழு இழு என இழுத்துக்கொண்டிருப்பதால் இச்சாலை பணிகள் முடித்து எப்போது முழுமையான பயன்பாட்டிற்கு வரும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

 

 

 

இந்த சாலை வழியாக சிதம்பரத்திலிருந்து விருத்தாசலம் வழியாக சேலம், கள்ளக்குறிச்சி,  கோவை ஆகிய ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள், கனரக வாகனங்கள் மற்றும் அன்றாட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய சிதம்பரம், சேத்தியாதோப்பு, விருத்தாசலம் போன்ற நகரங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகள், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் என ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கானோர் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் முழுவதும் முடிவடையாத பாலங்கள், பாதி, பாதியாக போடப்பட்டிருக்கும் சாலையால் வாகன ஒட்டிகள் மிகுந்த அவதிப் படுவது மட்டுமில்லாமல்,  15 கிலோமீட்டர் சென்று வருவதற்கே உடம்பு வலி, வாகனங்கள் ஏற்படுத்தும் மண் புழுதியால் மூச்சு திணறல் போன்ற பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகின்றனர். அதுமட்டுமில்லாமல் கிராமங்களில் இருந்து சைக்கிள் மூலமாக பள்ளிக்கு  செல்லும் சிறுவர்களுக்கு சாலையில் உள்ள மேடு, பள்ளங்களால் உயிருக்கு ஆபத்து நேர வாய்ப்புள்ளதாக  பெற்றோர்கள் பிள்ளைகள் வீடு திரும்பும் வரை அச்சத்துடனே உள்ளனர். 

 

பாலம் கட்டும் பணியானது பாதியிலேயே நிற்பதினால், பாலத்தின் வெளியே தெரியும் இரும்பு கம்பிகளுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லாததால், எந்த சூழ்நிலையிலும் தவறி விழுபவர்களுக்கு உயிர் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக வாகன ஓட்டிகள் ஆதங்கத்துடன் தெரிவிக்கின்றனர். மேலும் பாதி வேலை முடிந்துள்ள பாலங்கள், பாலம் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் உள்ளிட்ட இடங்களில் எச்சரிக்கை பலகைகள், தடுப்பு வேலிகள், இரவில் மிளிரும் ஒளிப்பான்கள் போன்றவைகள் எதுவும் சரிவர அமைக்கப்பாடததால், புதிதாக பயணிக்கும் நபர்கள் அச்சத்துடன் பயணிப்பதும், ஒரு சில நேரங்களில் விபத்து ஏற்படும் சூழலும் உள்ளதாக கூறுகின்றனர். 

 

 

 

 

புதிதாக அமைக்கப்பட்ட இச்சாலையானது சில இடங்களில்  தரமற்ற முறையில் அமைப்பதாகவும், இரண்டாக பிளவு படுவதாகவும் கூறி ஆங்காங்கே பொதுமக்கள், அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்திய பிறகு கண் துடைப்புக்காக 'பேட்ச் ஒர்க்' மட்டும் நடந்து வருகின்றன. முன்னதாக இச்சாலை பணியை தொடங்கும் போது சாலையோரமிருந்த வீடுகள், நிலங்கள், மரங்கள் போன்றவற்றை கையகப்படுத்த முற்பட்ட போது  நிவாரண தொகை குளறுபடிகளால்  பல்வேறு போராட்டங்கள் நடந்தன.  ஆனால் அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற காவல்துறை மூலம், அடக்குமுறை கையாண்ட தமிழக அரசானது,  குறிப்பிட்ட நேரத்தில் சாலை பணியை முடிக்காத ஒப்பந்தாரர்களின் மீது எவ்வித நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

 

 

இந்த சாலை பணிக்காக ரூ.162 கோடிக்கு மேல் ஒப்பந்தம் செய்யப்பட்டு,  சாலை போடுவதற்கான ஒப்பந்தம் முடிவடைந்து 8 மாதங்கள் கடந்து விட்ட நிலையில், முழு வேலையும் முடிக்கபடாமல் இருப்பதாலும்,  அதற்குள் சாலையில் பல்வேறு இடங்களில் பிளவு ஏற்பட்டு வருவதினாலும்,  இந்த சாலை பணியில் பல கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளதாக தெரிய வருகிறது. மேலும் இந்த சாலையை ஒப்பந்தம் செய்த நிறுவனம் சாலை பணியை முழுவதுமாக முடிக்காமல் இழுப்பதால்  தமிழக அரசு மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஒப்பந்ததாரர்களின் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,  இச்சாலை பணிகளை முழுமையாக முடித்து வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் பாதுகாப்பான பயணத்துக்கு வழி செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

“தமிழகத்தில் நீடித்த வளர்ச்சியை தி.மு.க அரசால் மட்டுமே வழங்க முடியும்” - மல்லிகார்ஜுன கார்கே பேச்சு

Published on 15/04/2024 | Edited on 16/04/2024
“ Mallikarjun Kharge speech Only a DMK government can deliver sustainable development in Tamil Nadu

கடலூர் மாவட்டம் நெய்வேலியில், கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.கே. விஷ்ணு பிரசாத் கை சினத்தில் போட்டியிடுகிறார். அதேபோல் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டு கடலூர் தொகுதியில் கை சின்னத்தில் போட்டியிடும் விஷ்ணு பிரசாத்தையும், சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிடும் தொல். திருமாவளவனையும் இரு கரம் கோர்த்து பானை மற்றும் கை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து அவர் மக்கள் மத்தியில் பேசுகையில், “இந்திய கூட்டணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தந்தை பெரியார், காமராஜர், கலைஞர் ஆகியோரின் நினைவுகளை இத்தருணத்தில் நினைவு கூற கடமைப்பட்டுள்ளோம். பாரதிய ஜனதா அரசு பல்வேறு வரிவிதிப்புகள் மூலம் ஏழை எளிய மக்களை வதைத்து வருகிறது. அதிலும் குறிப்பாக, தாழ்த்தப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்ட விவசாய பெருங்குடிகள் ஆகியோரின் நிலை மிகுந்த மோசமான நிலையில் உள்ளது. அவர் பிரதமர் ஆவதற்கு முன்பும், பிரதமர் ஆனதற்கு பின்பும் அடிக்கடி கூறி வருவது 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்பதையும் ஒவ்வொரு குடும்பத்தாரின் வங்கி கணக்கில் 15 லட்சம் கருப்பு பணத்தை மாற்றி தருவேன் எனவும் வாக்குறுதி தந்தார். அதில் ஏதாவது ஒன்றை செய்துள்ளாரா?

காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சி அமைத்தவுடன் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும். இந்தப் பிரச்சாரக் கூட்டத்தில் நான் திடமாக கூறிக் கொள்வது என்னவென்றால் இரண்டு விஷயங்களை மட்டும் மக்கள் மன்றத்தில் கூற விரும்புகிறேன். ஒன்று இந்திய ஜனநாயகம் பாதுகாக்கப்படும், மற்றொன்று அரசியலமைப்பு சட்டம் பாதுகாக்கப்படும். நான் 53 ஆண்டு காலம் சட்டமன்ற உறுப்பினர், எம்.பி ராஜ்யசபா உறுப்பினர் எனப் பல்வேறு பதவிகளில் இருந்து வருகிறேன். ஆனால், இந்த ஆட்சியின் போதுதான் கவர்னர் என்ற பதவியின் செயல்பாடுகள் மிகுந்த கேள்விக்குரியதாக உருவாகியுள்ளது. அவர் பட்ஜெட் கூட்டத்தொடர், பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் போன்றவைகளில் எல்லை மீறுவதைக் காண முடிந்தது. 

“ Mallikarjun Kharge speech Only a DMK government can deliver sustainable development in Tamil Nadu

பாஜக அரசை எதிர்ப்பதில் தமிழக முதல்வர் மிக முக்கிய இடமாக உள்ளார். அதிலும் குறிப்பாக நீட் தேர்வு போன்றவற்ற எதிர்ப்பதில் மிக உறுதியாக உள்ளார். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் தற்போது உள்ள சிஸ்டத்தை நிச்சயம் மாற்றுவோம். விவசாயிகள் இப்போது மிகுந்த மோசமான நிலையில் உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் சிறக்க, சிறப்பு நடவடிக்கை காங்கிரஸ் அரசு நிச்சயம் மேற்கொள்ளும். தமிழகத்தில் நீடித்த வளர்ச்சியை, தி.மு.க அரசால் மட்டுமே தர முடியும். பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டிருக்கிறது. ஏன் விலை உயர்வு என்று கேட்டால் , மோடி அரசு குருடாயில் விலை உயர்வு என்கிறது. ஆனால், உலக அளவில் குரூடாயில் விலை குறைந்த போது பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவில்லை. இதனால் ஏழை எளிய மக்கள் விலைவாசி உயர்வால் அவதி அடைந்து வருகின்றனர்.

ஆயிரம் மோடி வந்தாலும் இந்திய ஜனநாயகத்தையும், அரசியல் சட்டத்தையும் ஒன்றும் அசைக்க முடியாது. இந்தியாவில் உள்ள பல்வேறு துறைகளில் உள்ள எஸ்.சி, எஸ்.டி பிற்பட்டோர் பிரிவினருக்கான காலியிடங்களை நிச்சயம் நிரப்புவோம். இதனால் சுமார் 30 லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்புப் பெறுவர் எனவே அனைவரும் கை சின்னத்திற்கும் பானை சின்னத்திற்கும் வாக்களித்து ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும்” என்று பேசினார்.  

இந்தப் பொதுக்கூட்டத்தில் தமிழக தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, நெய்வேலி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சபா. ராஜேந்திரன், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி, மாநில செயலாளர் சந்திரசேகர், கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கோ.மாதவன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர்.