Skip to main content

6 பேர் கொலை வழக்கு; வி.ஏ.ஓவிடம் குறுக்கு விசாரணை

Published on 20/02/2023 | Edited on 20/02/2023

 

Cross-examination VAO case of passed away 6 people Salem court!

 

சேலம் அருகே நடந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில், நீதிமன்றத்தில் அரசுத்தரப்பு சாட்சியான விஏஓவிடம் குறுக்கு விசாரணை நடந்தது. 


சேலம் தாசநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் குப்புராஜ். ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர். இவருடைய மனைவி சந்திரா, மகன் ரத்தினம், மருமகள் சந்தானகுமாரி, பேரன் கவுதம், பேத்தி விக்னேஸ்வரி ஆகியோர் கடந்த 2010ம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து மல்லூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். 


இந்நிலையில், குப்புராஜின் மூத்த மகன் சிவகுரு, 17 வயதான பேரன் ஆகியோர் தாங்கள்தான், சொத்துத்தகராறில் கொலை செய்ததாகக்கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் சரணடைந்தனர். ஒருகட்டத்தில் வழக்கு விசாரணை சிபிசிஐடி காவல்துறைக்கு மாற்றப்பட்டது. இந்த கொலை வழக்கு தொடர்பாக சிவகுரு, இவருடைய 17 வயதான மகன், மனைவி மாலா, மகள் யுவபிரியா, மருமகனும் காவலருமான ரஜினி மற்றும் செந்தில்குமார், வெடிகாரன்புதூர் சேகர் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கு விசாரணை சேலம் 2வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வெள்ளிக்கிழமை (பிப். 17) நீதிபதி ரவி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.  இந்தக் கொலைக்குப் பயன்படுத்திய ஆயுதங்கள் வி.ஏ.ஓ சுப்பிரமணி முன்னிலையில் பறிமுதல் செய்யப்பட்டது. 

 

இதையடுத்து வி.ஏ.ஓ சுப்ரமணியிடம் நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணை நடந்தது. கொலைக்கு பயன்படுத்தப்பட்ட சூரிக்கத்தி, நைலான் கயிறு மற்றும் காவலர் ரஜினி பயன்படுத்திய அலைபேசி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு, சாட்சியக்குறியீடு செய்யப்பட்டு இருந்தன. அவற்றை அரசுத்தரப்பு வழக்கறிஞர்கள் நீதிபதி முன்பு காண்பித்தனர். 3 மணி நேரம் குறுக்கு விசாரணை நடந்தது. மீண்டும் விசாரணை வரும் 28ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்து உத்தரவிட்டார். 

 

 

சார்ந்த செய்திகள்