
'தயாநிதிமாறனின் வெற்றி செல்லும்' என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட்ட தயாநிதி மாறனின் வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனத தாக்கல் செய்யப்பட்டிருந்தது. சென்னை மத்திய தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட எம்.எல்.ரவி என்பவர் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 17ஆம் தேதி பிரச்சாரம் ஓய்ந்த நிலையில் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆனால் அன்றைய நாளில் பத்திரிகைகளில் தயாநிதி மாறன் சார்பில் பிரச்சார விளம்பரம் வெளியிடப்பட்டிருந்தது. இது சட்டத்திற்கு எதிரானது. மேலும் பிரச்சார செலவு, விளம்பர செலவு, பூத் ஏஜென்ட் செலவு ஆகியவை குறித்து தயாநிதி மாறன் தரப்பில் தெளிவாக தெரிவிக்கப்படவில்லை, தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட அளவைவிட அதிகப் பணம் செலவு செய்யப்பட்டது. எனவே தயாநிதி மாறனின் வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும் 'என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தேர்தல் வழக்கு தொடர்ந்து விசாரிக்க எந்த காரணங்களும் இல்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.