நீதிமன்ற வழிகாட்டுதல்படி டெங்கு நிவாரணம்! - அமைச்சர் ஜெயக்குமார்
டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படி உரிய நிவாரணம் வழங்கப்படும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அவர்,
டெங்குவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கக்கோரி வழக்கு தொடரப்பட்டு, அந்த வழக்கானது விசாரணையில் உள்ளது. இந்நிலையில், நீதிமன்றம் என்ன வழிகாட்டுதலின் படியே அரசு நடவடிக்கை எடுக்கப்படும். தார்மீக அடிப்படையில் நிவாரண நிதிகளை பலமுறை பொதுமக்களுக்கு முதல்வர் வழங்கியிருக்கிறார். அதேபோல், பொது நிவாரண நிதியில் இருந்து பலமுறை பொதுமக்களுக்கு நிவாரண நிதியானது வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் மற்றும் அரசு விதிமுறைகளின் படி நிவாரண நிதி பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும்.
தமிழர்கள் உலகம் முழுவதும் பணிசெய்கின்றனர். அவர்களுக்கான உரிய பாதுகாப்பு எப்போதும் வழங்கப்படும். சட்டவிதிமீறல் இல்லாமல், சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படும் யாரேனும் கைது செய்யப்பட்டால், அதுகுறித்து உரிய நடவடிக்கைகள் அரசு சார்பில் எடுக்கப்படும். செம்மரக்கட்டைகள் ஆந்திர அரசின் சார்பில் பாதுகாக்கப்பட்ட ஒன்றாக இருக்கும்பட்சத்தில், அதை வெட்டச் செல்வது சட்ட விரோதமானது. சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களிடம், அந்த செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றுதான் சொல்லமுடியுமே தவிர, அவர்களுக்கு அரசு உதவாது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.