சென்னை மெரினா லூப் சாலையில் கார் ஒன்று கடற்கரை நோக்கிச் செல்ல முற்பட்டது. அப்போது அங்கு பணியிலிருந்த காவலர்கள் கடற்கரைக்குச் செல்ல தற்போது அனுமதி இல்லை என்று தடுத்து நிறுத்தியுள்ளனர். காரின் உள்ளே வேளச்சேரியைச் சேர்ந்த சந்திரமோகன் என்பவரும், மயிலாப்பூரைச் சேர்ந்த தனலட்சுமி என்வரும இருந்துள்ளனர். இருவரும் நண்பர்கள் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் காரில் இருந்து இறங்கிய இருவரும், காவலர்களை ஆபாசமாகவும் தரைகுறைவாகவும் பேசினர். அதிலும் பணியில் இருந்த காவலர்களை ஒருமையில் அழைத்து முகசுழிக்கும் வகையிலான வார்த்தைகளில் தீட்டித் தீர்த்தனர். மேலும், ‘இந்த பகுதி பெண் ஆய்வாளர் ஒருவர் என்னைப் பார்த்தாலே, ஐய்யா! வரங்கய்யா என்று வணக்கம் வைத்துவிட்டு ஓடும்... ’ என்று பேசினார். இருவரும் மதுபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனைக் காவலர்கள் வீடியோ எடுத்த நிலையில் தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதனைத் தொடர்ந்து காவலர்கள் கொடுத்த புகாரின் பேரில், இருவர் மீதும் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், வீடியோவில் இருந்த கார் எண்ணைக் கொண்டு தீவிரமாகத் தேடி வந்தனர். இந்த நிலையில்தான் இருவரையும் துரைப்பாக்கத்தில் வைத்து கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.