
கோவை மாவட்டம் உக்கடம் கோட்டைமேடு ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த 2022ஆம் அக்டோபர் மாதம் 23 ஆம் தேதி அதிகாலை 4 மணி அளவில் கார் ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த கார் திடீரென வெடித்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த கார் வெடித்த இடத்திலிருந்து ஆணிகள், பால்ரஸ் குண்டுகள் உள்ளிட்ட பல வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அதன் பின்னர் இந்த சம்பவத்தில் உயிரிழந்த நபர் உக்கடம் பகுதியைச் சேர்ந்த ஜமேசா முபீன் என்பதும் அவரது வீட்டில் 75 கிலோ வெடி பொருட்களைப் பதுக்கி வைத்து இருந்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து இந்த வழக்கில் தொடர்புடைய முகமது தால்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர் கான் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். அதில் 5 பேரை உபா சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவ்வழக்கு விசாரணை தேசியப் புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.) மாற்றப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி இந்த வழக்கில் ஜமேசா முபீனின் நெருங்கிய நண்பரான இத்ரீஸ் என இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் பவாஸ் ரஹ்மான், அபு ஹனிபா, சரண் மாரியப்பன் ஆகிய மூவரைக் கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் வைத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். முன்னதாக கார் வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.