Published on 02/03/2022 | Edited on 02/03/2022
திருச்சி மாநகராட்சியில் இன்று மாமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. 65 வார்டுகளில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் இன்று திருச்சி மாநகராட்சி ஆணையரால் பதவிப் பிரமாணம் செய்துவைக்கப்பட்டனர். காலை முதலே பரபரப்பாக இருந்த மாநகராட்சி அலுவலகத்திற்கு 65 வார்டுகளைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள், அவர்கள் சார்ந்திருக்கும் கட்சியினர், அவர்களுடைய குடும்பத்தார் என பெரும் கூட்டமே சூழ்ந்திருந்தது.
இந்நிலையில் திருச்சி 23வது வார்டு மாமன்ற உறுப்பினரான சிபிஐ கட்சியைச் சேர்ந்த சுரேஷ், பதவி ஏற்பு விழாவிற்கு தன்னுடைய சைக்கிளில் மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்திருந்தார். இது மற்ற மாமன்ற உறுப்பினர்களையும், அங்கு கூடியிருந்த கட்சியினர், பொதுமக்கள் எனப் பலரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியது.