
உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 57 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 4000- க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 1,00,000- க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன.
இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கரோனா பாதிப்பு என்பது மராட்டியத்திற்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தில் இருந்து வருகின்றது. தமிழகத்தில் நேற்று வரை 18,545 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று எப்போதும் இல்லாத அளவாக 817 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. இன்றைக்கு அதையும் தாண்டி 827 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்றைய பாதிப்பையும் சேர்த்து இதுவரை கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 19,372 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் இன்று 559 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று கரோனா குணமாகி 639 பேர் வீடு திரும்பியுள்ளனர். மேலும் கரோனா காரணமாக இன்று 12 பேர் உயிரிழந்துள்ளனர்.