Skip to main content

கரோனாவால் இறந்தவரின் முகத்தைப் பார்த்து அதிர்ந்த உறவினர்கள் - கள்ளக்குறிச்சியில் பரபரப்பு!

Published on 30/09/2020 | Edited on 30/09/2020

 

corona incident in kallakurichy

 

கள்ளக்குறிச்சியில் கரோனாவால் உயிரிழந்தவரின் சடலத்தை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்காமல் மற்றொரு குடும்பத்தினரிடம் அரசு மருத்துவமனை அலட்சியமாக ஒப்படைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் தொட்டியத்தைச் சேர்ந்த மனோ (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் கடந்த 27ஆம் தேதி கரோனா உறுதி செய்யப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். சுயநினைவின்றி காணப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி அளிக்கப்பட்டது.

 

அந்த மருத்துவமனையிலேயே செவிலியராகப் பணிபுரிந்த ஒருவர் மனோவின் உறவினராக இருந்ததால் அவரை அவ்வப்போது அடிக்கடி விசாரித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் மனோ உயிரிழந்ததாகவும் அவருக்கு மீண்டும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் மருத்துவப் பணியாளர்கள், செவிலியருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

 

அதேபோல் மருத்துவமனை நிர்வாகம் சார்பில், மனோவின் உறவினர்களுக்கு இந்தத் தகவல் கொடுக்கப்பட்டது. இதனை அடுத்து ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊரான தொட்டியத்திற்கு அவரது உடல் அனுப்பி வைக்கப்பட்டது. உயிரிழந்த மனோவின் உடலை மயானத்திற்கு கொண்டு சென்ற  போது, உறவினர்கள் இறுதியாக அவரது முகத்தைப் பார்க்க விரும்பினர். இதனால், அவரது உடலுக்கு மேலே போர்த்தப்பட்டிருந்த வெள்ளைத் துணியை அகற்றிய போது அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். ஏனெனில் உள்ளே இருந்தது வேறு ஒருவரின் சடலம்.

 

Ad

 

இதனால் அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள் இது தொடர்பாக அரசு மருத்துவமனையிடம் தெரிவிக்க, மருத்துவமனை ஊழியர்கள் விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுதுதான் உண்மை தெரியவந்தது. கரோனா காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மனோவின் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், அவரை சாதாரண கரோனா வார்டுக்கு மாற்றியுள்ளனர். அதே நேரத்தில் தீவிர சிகிச்சை பிரிவில், அதே படுக்கையில் திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த ராமன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த   ராமன்  இறந்துவிட, அந்தப் படுக்கையிலிருந்த மனோவின் உறவினருக்குத் தகவல் கொடுத்துள்ளது அரசு மருத்துவமனை நிர்வாகம்.

 

இதன் பிறகு, உடனடியாக திருக்கோவிலில் உள்ள ராமனின் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டு இறுதிச் சடங்குகள் நடைபெற்றது. ஏற்கனவே தமிழகம் முழுவதும் கரோனா என்ற ஒற்றைச் சொல் மக்களின் வாழ்வாதாரத்தைப் புரட்டி, அச்சத்தின் உச்சத்தில் நிறுத்தியிருக்கும் நிலையில், அரசு மருத்துவமனைகளில் இப்படி நடந்திருக்கும் ஒரு அலட்சியம், மேலும் அதிருப்தியை மக்களிடையே ஏற்படுத்தி உள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்