புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்ப்பட்டினத்தைச் சேர்ந்தவர் அன்வர் ராஜா (33).இவர் பைக் வாங்கி-விற்கும் தொழில் செய்து வந்தார்.ராமநாதபுரம் மாவட்டம் பேய்க்கரும்பு பகுதியைச் சேர்ந்தவர் அருண்பாண்டி(27). இவர் கோட்டைப் பட்டினத்தில் தங்கி மீன்பிடிக்கும் தொழில் செய்த வந்தார்.கோட்டைப்பட்டினம் மீனவர் காலணியைச் சேர்ந்தவர் அசன்மைதீன்(35) இவரும் கடலுக்குச் சென்று மீன்பிடிக்கும் தொழில் செய்து வந்தார்.

அன்வர்ராஜா, அருண்பாண்டி, அசன்மைதீன் இவர்கள் 3 பேரும் நண்பர்கள். இவர்கள் அடிக்கடி இரவு நேரத்தில் ஒன்றாகச் சந்தித்து மது அருந்துவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.தற்போது கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால்,டாஸ்மாக் மதுபானக் கடைகளும் மூடப்பட்டுள்ளன.இதனால் மதுபானம் கிடைக்காமல் அவதிப்பட்ட நண்பர்கள் ஷேவிங் செய்த பின்பு இன்பெக்சன் வருவதைத் தடுப்பதற்காகப் போடப்படும்.லோஷனை வாங்கிச் சென்று கோட்டைப்பட்டினம் தர்ஹா அருகே அமர்ந்து சோடாவுடன் கலந்து அருந்தியுள்ளனர்.
லோஷனை அருந்திய 3 பேருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதில் சிகிச்சை பலனின்றி அருண்பாண்டி,அசன்மைதீன் ஆகியோர் உயிரிழந்தனர்.அன்வர்ராஜா உயிருக்கு ஆபத்தான நிலையில் அறந்தாங்கி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.இச்சம்பவம் குறித்து கோட்டைப்பட்டினம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுபானம் கிடைக்காததால், லோஷன் அருந்தி 2 பேர் பலியான சம்பவம் கோட்டைப்பட்டினம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.