Skip to main content

சர்ச்சை கேள்வி... பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது விசிக போலீசில் புகார்!

Published on 16/07/2022 | Edited on 16/07/2022

 

Periyar University

 

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை வரலாற்றுத்துறை இரண்டாம் ஆண்டுக்கான தேர்வு நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்தத் தேர்வில் வழங்கப்பட்ட வினாத்தாளில் சர்ச்சைக்குரிய கேள்வி ஒன்று இடம் பெற்றிருந்தது. ஒரு கேள்வியில் 4 ஆப்ஷன்களாக சாதிப் பெயர்கள் கொடுக்கப்பட்டு அதில் எந்த சாதி தாழ்த்தப்பட்ட சாதி என இடம் பெற்றிருந்தது. இது பெரும் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் சாதி ஒழிக்க போராடிய பெரியார் பெயரில் உள்ள பல்கலைக்கழகத்தில் சாதி பற்றிய கேள்வியா? என பல்வேறு தரப்பினர் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர்.

 

இந்த விவகாரம் குறித்து தமிழக உயர் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை வரலாற்றுத்துறை இரண்டாம் ஆண்டுக்கான தேர்வு வினாத்தாளில் சாதி குறித்து கேள்வி கேட்டது குறித்து ஊடகங்களில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கேள்வி இடம்பெற்றது குறித்து உயர் கல்வித்துறை உயர் அலுவலர் நிலையில் குழு அமைத்து விசாரணை நடத்தி, அந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் தவறு செய்தவர்கள் மீது  தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்' எனத் தெரிவித்திருந்தது.

 

அதேபோல் பெரியார் பல்கலைக்கழகம் சார்பிலும் வருத்தம் தெரிவிக்கப்பட்டிருந்தது. பிற பல்கலைக்கழகம் மற்றும் பிற பல்கலைக்கழகத்தில் இணைவுப் பெற்ற கல்லூரிகளில் பணியாற்றி வரும் ஆசிரியரைத் தலைவராக நியமித்து, அவரது மேற்பார்வையில் வினாத்தாள் தயாரிக்கப்படும். அவரே இறுதி செய்து பல்கலைக்கழகத்திற்கு வினாத்தாள்களை அனுப்பி வைப்பார். அவ்வாறு தயாரிக்கப்படும் வினாத்தாள்களை பல்கலைக்கழக தேர்வுத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் எவரும் படிப்பதற்கு அனுமதி இல்லை. எனவே, சர்ச்சைக்குரிய வினா விவகாரத்தில் எந்தவிதமான உள்நோக்கமோ, நேரடியான தொடர்போ பல்கலைக்கழகத்திற்கு இல்லை. இதனால் கல்வியாளர்கள் மற்றும் மாணவர்கள், பொதுமக்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டிருந்தால், அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர், தேர்வாணையர், வினாத்தாள் தயாரிப்பாளர் உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்