Skip to main content

ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ‘ஓவர்டேக்’ செய்த மாணிக்கம் தாகூர்...! -காங்கிரஸ் வேட்பாளர் தேர்வு பின்னணி

Published on 23/03/2019 | Edited on 23/03/2019

விருதுநகர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனா? மாணிக்கம் தாகூரா? என்ற கேள்வி வேட்பாளர் பட்டியல் வெளியிடும் வரையிலும் பொதுவெளியில் நீடித்தது. தேர்தல் அறிவிப்பு வெளியானதிலிருந்தே, மாணிக்கம் தாகூர்தான் வேட்பாளர் என, தொடர்ந்து பதிவிட்டு வந்தது நக்கீரன். காங்கிரஸ் கட்சியும் மாணிக்கம் தாகூரையே விருதுநகர் வேட்பாளராக அறிவித்திருக்கிறது. 

 

manikkam thagoor

 

விருதுநகர் தொகுதிதான் வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்த சீனியர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ‘ஓவர்டேக்’ செய்து, வேட்பாளர் தேர்வில் மாணிக்கம் தாகூர் ‘டிக்’ ஆனது எப்படி? இதற்கான விடை தெரிய வேண்டுமென்றால், கட்சியில் மாணிக்கம் தாகூரின் சீரான வளர்ச்சி குறித்து தெரிந்துகொள்ள வேண்டும். 
 

2009 நாடாளுமன்ற தேர்தலில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு எதிராக,  இதே நாடாளுமன்ற தொகுதியில் புதுமுகமாக இவரைக் களத்தில் இறக்கியது காங்கிரஸ். வைகோ எங்கே? மாணிக்கம் தாகூர் எங்கே? என்கிற ரீதியில் கருத்துக்கள் அப்போது காரசாரமாக வெளிப்பட்டன.  ஆனாலும், அந்தத் தேர்தலில் வெற்றிவாகை சூடினார் மாணிக்கம் தாகூர். பிறகுதான், காங்கிரஸ் தலைமையின் சரியான தேர்வு என்பது விருதுநகர் தொகுதியில் உள்ள கதர் சட்டைகளுக்கே புரிந்தது. 
 

முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பனின் அண்ணன் மகனான மாணிக்கம் தாகூர், கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே அரசியலில் ஆர்வம் காட்டினார். இந்திய தேசிய மாணவர் சங்கத்தில் இணைந்து செயலாற்றினார். 1994-ல் அச்சங்கத்தின் மதுரை மாவட்ட பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அடுத்து, தனது பணியை மாநில அளவில் விரிவுபடுத்தினார். அதனால், 1996-ல் இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆக முடிந்தது. 2003-2005 காலகட்டத்தில், இந்திய இளைஞர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஆனார். 2006-ல் காங்கிரஸ் மத்திய தேர்தல் ஆணையத்தின் தலைவராகி, கட்சித் தேர்தல்களை சிறப்பாக நடத்தினார். 2008 வரையிலும், இளைஞர் காங்கிரஸ் தேர்தல் ஆணையராக செயல்பட்டார். 2009-ல் விருதுநகர் தொகுதி எம்.பி. ஆனார். தற்போது, கர்நாடக காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளராகவும் இருக்கிறார். 
 

மாணிக்கம் தாகூரின் உழைப்பும் சுறுசுறுப்பும் பிடித்துப்போனதால், ராகுல் காந்தியின் குட்புக்கில் இடம்பெற்றார். தமிழகம் கடந்து கட்சிப்பணி ஆற்றிவரும் மாணிக்கம் தாகூரை எளிதாக எடைபோட்டு விட்டார்கள் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆதரவாளர்கள். 
 

கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி வைத்தது காங்கிரஸ். தோற்றுவிடுவோம் என்று தெரிந்தும் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டார் மாணிக்கம் தாகூர். எம்.பி.யாக இல்லாத நிலையிலும்  விருதுநகர் அரசியலில் தொடர்ந்து தன்னை நிலைநிறுத்தி வருகிறார். இந்தப் பின்னணிதான், அவரை விருதுநகர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் ஆக்கியிருக்கிறது. 



தேமுதிக வேட்பாளர் அழகர்சாமியையும், அமமுக வேட்பாளர் அய்யப்ப பரமசிவனையும் எளிதாக எதிர்கொண்டு, தேர்தல் களத்தில் ‘வெற்றிநடை’ போடுவார் மாணிக்கம் தாகூர் என்று அடித்துச் சொல்கிறார்கள் கதர் சட்டையினர்.  
 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

கர்நாடக முதல்வர் சித்தராமையா போராட்டம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Karnataka Chief Minister Siddaramaiah struggle

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கியது. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இறுதிக் கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில், ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்நிலையில் கர்நாடகா மாநிலத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய வறட்சி நிவாரணம் வழங்காததை கண்டித்து அம்மாநில முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பெங்களூரு விதான சவுதாவில் உள்ள காந்தி சிலை முன்பு இன்று (23.04.2024) போராட்டம் நடத்தினர். அப்போது மத்திய அரசு மாற்றாந்தாய் போக்குடன் நடத்துகிறது என கார்நாடக அரசு சார்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இது குறித்து கர்நாடக மாநில முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சித்தராமையா கூறுகையில், “காங்கிரஸ் கட்சி சார்பில், மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்தினோம். நரேந்திர மோடியும், அமித்ஷாவும் கர்நாடக விவசாயிகளை வெறுக்கிறார்கள். கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி மத்திய அரசுக்கு வறட்சி குறித்து குறிப்பாணை (memorandum) கொடுத்தோம். பிறகு மத்திய குழு வந்தது.  அதன் பின்னர் மாநிலத்தின் 223 தாலுகாக்களில் வறட்சி நிலவி வருவதை அமித் ஷா ஆய்வு செய்தார். இதுவரை காலதாமதமாக விவசாயிகளுக்கு 650 கோடி ரூபாய் மத்திய அரசு வழங்கியுள்ளது. கர்நாடகாவுக்கு உரிய நிவாரணம் வழங்காததற்கு நிர்மலா சீதாராமனும், நரேந்திர மோடியும் தான் காரணம்” எனத் தெரிவித்தார். 

Next Story

'அபாண்டமாக பொய் பேசுகிறார் மோடி;-ப.சிதம்பரம் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
 'Modi speaks a lot of lies;- P. Chidambaram condemns

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்கு கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

nn

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''மோடி பேசிய ஒவ்வொரு வாக்கியமும் பொய்க்கு மேல் பொய் நிரம்பியதாக இருந்தது. மக்களின் நகை, சொத்துக்களைப் பறித்து இஸ்லாமியர்களிடம் தந்து விடுவோம் என்று காங்கிரஸ் எப்போது பேசியது என்று பாஜகவினால் கூற முடியுமா? தனிநபரின் சொத்துக்களையும் பெண்களிடம் இருக்கும் தங்கத்தையும் மதிப்பீடு செய்வோம் என எப்போது காங்கிரஸ் அறிவித்தது என பாஜக கூற முடியுமா? பழங்குடி மக்களிடம் உள்ள தங்கம், வெள்ளி எவ்வளவு என்பதை கணக்கெடுப்போம் எனக் காங்கிரஸ் எப்போது கூறியது? அரசு ஊழியர்களின் நிலமும் பணமும் கைப்பற்றப்பட்டு பிரித்தளிக்கப்படும் எனக் காங்கிரஸ் எப்போது பேசியது? நரேந்திர மோடிக்கு ஏற்கெனவே பதவி வகித்த பிரதமர்களை கொஞ்சமாவது மதிக்க தெரிந்து கொள்ள வேண்டும். ராஜஸ்தானில் நடந்த பாஜக பொதுக் கூட்டங்களில் மோடி அபாண்டமாக பொய் பேசி உள்ளார். இதுவரை இருந்த பிரதமர்களில் ஒருவர் கூட மோடியை போல் அடாவடியாக பேசியது இல்லை''எனக் கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.