Skip to main content

எஸ்.வி.சேகருக்கு நிபந்தனை முன்ஜாமீன்!

Published on 16/09/2020 | Edited on 16/09/2020

 

Conditional pre-bail for SV Sekar

 

எம்.ஜி.ஆர் சிலைக்கு காவிப் போர்வை போர்த்தியது, பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றப்பட்டது குறித்து கருத்துத் தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தலைவர்களின் சிலைகளை இவ்வாறு களங்கம் செய்வோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது எனவும் தெரிவித்திருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் நடிகர் எஸ்.வி.சேகர் பதிவிட்ட வீடியோவில், காவியைக் களங்கம் எனக் குறிப்பிடும் தமிழக முதல்வர், தேசியக் கொடியில் அந்த நிறத்தைக் கிழித்துவிட்டு சுதந்திர தினக் கொடியை ஏற்றுவாரா எனப் பேசியிருந்தார். தேசியக் கொடியை அவமதித்தும், தமிழக முதல்வரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் பேசி சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்ட எஸ்.வி சேகருக்கு எதிராகச் சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜரத்தினம் என்பவர், சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில், எஸ்.வி.சேகர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் தன்னைக் கைது செய்யக் கூடும் என எஸ்.வி.சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, எஸ்.வி சேகர் மன்னிப்பு கேட்டால் கைது செய்ய மாட்டோம் எனக் காவல்துறை தெரிவித்தது. அதனால்,  தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும், தன் வாழ்நாள் முழுவதும் இனி ஒருபோதும் தேசியக் கொடியை அவமதிக்கும் வகையில் பேச மாட்டேன் என்ற உத்தரவாத மனுவையும் எஸ்.வி.சேகர் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, எஸ்.வி.சேகர் தெரிவித்த வருத்ததை ஏற்றுக்கொள்வதாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கின் விசாரணையை செப்டம்பர் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்ததுடன், அதுவரை கைது செய்யக்கூடாது என்ற உத்தரவையும் நீட்டித்துள்ளார்.

 

Ad


இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, தேவைப்படும் போது காவல்துறையின் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் எஸ்.வி சேகருக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

 

 

 

சார்ந்த செய்திகள்