
கோவை வனக் கோட்டத்தில் வனச்சரகராகப் பணியாற்றிவரும் ஏ.எம்.என்.சிவா என்பவர் ராபிட் ரெஸ்பான்ஸ் (rapid response team) குழுவில் பணிபுரியும் சக ஊழியர் சந்தீப்பை, தகாத வார்த்தைகளால் திட்டிய ஆடியோ உரையாடல் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வனத்துறைக்குச் சொந்தமான ஜீப் ஒன்று, பஞ்சர் ஆனது. அதற்கு சந்தீப் விளக்கம் அளிக்கிறார். அதற்கு வனச் சரகர் சிவா, “ஜீப் என்ன ஆனது” எனக் கேட்டு. தகாத வார்த்தைகளால் திட்டுகிறார். “யாரும் பணியில் இருக்க மாட்டீர்கள். தொலைச்சுப் புடுவேன்” எனச் சொல்லி விட்டு, தகாத வார்த்தை ஒன்றை உதிர்க்கிறார்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சந்தீப் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். இந்த ஆடியோ பதிவு ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இதுதொடர்பாக மனித உரிமைகள் ஆணையம் வனச்சரகர் சிவா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
இந்நிலையில், இந்த ஆடியோ உரையாடல் பதிவு குறித்து துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருவதாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.