Skip to main content

மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

Published on 24/10/2024 | Edited on 24/10/2024
CM MK Stalin letter to Union Minister Jaishankar

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் உரிய அனுமதிச் சீட்டு பெற்று விசைப்படகுகளில் வழக்கம்போல் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர். அதன்படி மீனவர்கள் நெடுந்தீவு கடற்பரப்பில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 16 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி நேற்று (23.10.2024) கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட 16 மீனவர்களையும் காங்கேசன் துறைமுகத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.  இந்த விசாரணைக்குப் பிறகு மீனவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுக்கிறது.

கைது செய்யப்பட்ட 16 மீனவர்களும் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதோடு மீனவர்களின் 2 விசைப்படகுகளையும் இலங்கைக் கடற்படையினர் சிறை பிடித்துள்ளனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 16 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 16 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (24.10.2024) கடிதம் எழுதியுள்ளார்.

CM MK Stalin letter to Union Minister Jaishankar

அந்த கடிதத்தில், “ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 16 மீனவர்கள், ஐ.என்.டி-டி.என்-10-எம்.எம்- 459 (IND-TN-10-MM-459) மற்றும் ஐ.என்.டி-டி.என்-10-எம்.எம்-905 (IND-TN-10-MM-904) பதிவெண்கள் கொண்ட இரண்டு இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்றிருந்தனர். இந்நிலையில், இலங்கைக் கடற்படையினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். தான் ஏற்கனவே குறிப்பிட்டது போல், இதுபோன்ற கைது சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து மீனவர்களின் குடும்பங்களுக்குத் துயரத்தை ஏற்படுத்துகிறது. இத்தகைய கைது நடவடிக்கைகள் தடையின்றி தொடர்வதுடன், அவை கடலோரப் பகுதிகளில் வாழும் மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்துக்கு இடையூறாக உள்ளது.

எனவே இதுபோன்று நம் நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 128 மீனவர்களையும், 199 மீன்பிடிப் படகுகளையும் விரைந்து விடுவிக்கவும் உரியத் தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், கூட்டு நடவடிக்கைக் குழுவினால் முன்மொழியப்பட்ட ஆலோசனைகள், மீனவர்கள் வாழ்வைச் சீர்குலைக்கும் இந்தப் பிரச்சினைக்கு ஒரு நிலையான தீர்வினைக் கொண்டுவரும் எனத் தான் நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்