கட்சியில் இல்லாத தினகரன் என்னை எப்படி
முதல்வர் ஆக்க முடியும்? எடப்பாடி பழனிச்சாமி
சசிகலாவின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் வீடுகளில் நடைபெற்று வந்த வருமான வரி சோதனையை தொடர்ந்து ஜெயலலிதா வீட்டிலும் சோதனை நடைபெற்ற போதும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் எடப்பாடி பழனிச்சாமியை துரோக ஆட்சி என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலையில் செய்தியாளர்களை சந்தித்தபோது, தினகரனின் இந்த கருத்துக்கு பதிலளித்தார்.
அவர், ‘’தினகரன் தயவினால்தான் முதல்வர் பதவி கிடைத்ததாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, ‘’டிடிவி தினகரனுக்கும் அதிமுகவுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை. கடந்த 10 ஆண்டுகளாக அதிமுகவில் இல்லாதவர் தினகரன். அப்படி இருக்கும்போது, 10 ஆண்டுகளாக கட்சியில் இல்லாத தினகரன் என்னை எப்படி முதல்வர் ஆக்க முடியும். மேலும், நான் சேலத்தில் இருந்த சமயம் ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளராக தன்னைத்தானே அறிவித்துக்கொண்டவர் தினகரன்.
கட்சியில் நான் விசுவாசமாக இருந்ததால் எனக்கு பதவி கிடைத்தது. அதிமுக சார்பில் 9 முறை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி, தோல்வியை சந்தித்துள்ளேன். என்னுடைய சிறப்பான பணிகளை பாராட்டி மறைந்த முதல்வர் ஜெயலலிதா கூடுதல் பதவிகளை எனக்கு வழங்கினார். சிறப்பான பணிகள் மூலம் படிப்படியாக உயர்ந்து முதல்வர் பதவிக்கு வந்துள்ளேன். யாருடைய தயவாலும் நான் முதல்வராகவில்லை. ஒட்டுமொத்த உறுப்பினர்களால் முதல்வர் ஆனேன்’’என்று தெரிவித்தார்.
- கதிரவன்