
கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. பாஜகவை வீழ்த்தி இழந்த ஆட்சியை காங்கிரஸ் கட்சி மீட்டெடுத்துள்ளது.
இந்த நிலையில் கர்நாடகத்தின் முதல்வர் யார் என்பதில் சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமார் ஆகிய இருவரிடையே போட்டி நிலவியது. இதனைத் தொடர்ந்து பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின் சித்தராமையா முதல்வர் என்றும், டி.கே.சிவகுமார் துணை முதல்வர் என்றும் காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.
இதனையொட்டி பெங்களூருவில் நாளை மறுநாள் மிகவும் பிரம்மாண்டமாக பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தொலைபேசியின் மூலம் அழைப்பு விடுத்திருந்தார். இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளவுள்ளார். இதற்காக நாளை மாலை சென்னையில் இருந்து விமானத்தின் மூலம் பெங்களூரு செல்லவிருக்கிறார்.