
கபடி போட்டியில் பங்கேற்று உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூபாய் 3 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், வல்லம் மதுரா மானடிகுப்பம் கிராமம், தெற்கு தெருவில் உள்ள புளியந்தோப்பு மைதானத்தில் ஜூலை 24- ஆம் தேதி அன்று மாவட்ட அளவில் கபடி போட்டி நடைபெற்றுள்ளது. இந்த கபடிப் போட்டியில் பங்கேற்ற புறங்கனி கிராமத்தைச் சேர்ந்த சஞ்சய் என்கிற விமல்ராஜ் விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக உயிரிழந்தார் என்ற செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன்.
உயிரிழந்தவரின் பெற்றோருக்கும், அவரது சகோதரிக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்த சஞ்சய் என்கிற விமல்ராஜின் குடும்பத்திற்கு ரூபாய் 3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்.