Skip to main content

கரோனாவால் பத்திரிகையாளர்கள் மரணம் - ரூபாய் 10 லட்சம் நிவாரணம்!

Published on 26/05/2021 | Edited on 26/05/2021

 

journalists, photographers, coronavirus chief minister mkstalin

 

தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்த பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் 10 லட்சம் நிவாரணம் வழங்க தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

 

தமிழக முதல்வரின் உத்தரவில், "கரோனா நோய்த் தொற்று காலத்தில் பல்வேறு சிரமங்களுக்கிடையே ஊடகவியலாளர்கள் பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் மக்களுக்குச் சரியாகக் கொண்டு சேர்ப்பதிலும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் முக்கியப் பங்காற்றி வருகிறார்கள்.

 

மக்களுக்கும், அரசுக்கும் ஒரு இணைப்புப் பாலமாக இக்காலக்கட்டத்தில் சிறப்பாக இயங்கிவரும் இவர்களது பணியினை ஊக்குவிக்கும் வகையில், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பதிவு செய்யப்பட்ட பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் மற்றும் காலமுறை இதழ்களில் பணிபுரியும் செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் (அரசு அங்கீகார அட்டை/ மாவட்ட ஆட்சியர் வாயிலாக வழங்கப்பட்ட அடையாள அட்டை/ இலவசப் பேருந்துப் பயண அட்டை போன்ற ஏதேனும் ஒரு வகையில் அரசால் அங்கீகரிக்கப்பட்டவர்கள்) ஆகியோருக்கு சிறப்பு ஊக்கத் தொகையினை உயர்த்தி தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

 

கடந்த ஆட்சியின்போது ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்ட ஊக்கத்தொகை மூன்றாயிரம் ரூபாய் ஆகும். இதனை தற்போது உயர்த்தி வழங்கக் கோரிப் பெறப்பட்டக் கோரிக்கையினைக் கனிவோடு பரிசீலித்த தமிழக முதல்வர், ஊடகவியலாளர்களுக்கான ஊக்கத் தொகையினை ரூபாய் 3,000 இலிருந்து ரூபாய் 5,000 ஆக உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

 

அதேபோன்று, கடந்த ஆட்சியின்போது பத்திரிகை மற்றும் ஊடகத்துறையில் பணிபுரியும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்கள், கரோனா நோய்த் தொற்று காரணமாக இறக்க நேரிட்டால், அவர்களது வாரிசுதாரர்களுக்கு ரூபாய் 5 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்க அரசாணை வெளியிடப்பட்டிருந்தது. இதனையும் உயர்த்தி வழங்கக் கோரி ஊடகவியலாளர்கள் சார்பாக அளிக்கப்பட்ட கோரிக்கையினைப் பரிவுடன் பரிசீலித்து, அதனை ரூபாய் 10 லட்சமாக உயர்த்தி வழங்கிட தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

 

மேலும், பத்திரிகைத்துறை மற்றும் அனைத்து ஊடகத்துறை நண்பர்களும் இந்த நோய்த் தொற்றுக் காலத்தில் மிகவும் பாதுகாப்பான முறையில் தங்கள் பணியினைக் கவனமுடன் மேற்கொள்ள தமிழக முதல்வர் இத்தருணத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்". இவ்வாறு முதல்வர் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்