அண்மையில் சில நாட்களுக்கு முன்பு மேட்டூர் அணை நீர்த்தேக்கத்தில் இறந்தும், மயங்கிய நிலையிலும் மீன்கள் கரை ஒதுங்கியது அந்தப் பகுதி மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி இருந்தது. நீர்வரத்து இல்லாததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்துள்ள நிலையில் மீன்கள் இறந்து கரை ஒதுங்குவது கோடை வெயிலின் தாக்கமா அல்லது ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக மீன்கள் உயிரிழக்கின்றனவா அல்லது வேதிப் பொருட்கள் கலந்து அதன் மூலம் ஏற்பட்ட பக்க விளைவு காரணமாக மீன்கள் உயிரிழக்கின்றனவா? என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வந்தனர்.
இந்நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மேலும் குறைந்துள்ளது. தற்போது 49 அடியாக அணை மட்டம் சரிந்துள்ளது. இதனால் மேட்டூரில் உள்ள நந்தி சிலை முழுவதுமாக தெரியும் சூழல் ஏற்பட்டுள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் அணைக்கு வரும் நீரின் அளவு மிகவும் குறைந்துள்ளது. அதேநேரம் குடிநீருக்காக திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்துள்ளது. பண்ணவாடி நீர்த்தேக்க பகுதியில் மூழ்கி இருந்த நந்தி சிலை மற்றும் ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தின் கோபுர முகப்பு ஆகியவை வெளியே தெரிகின்றன. மே மாதத்திற்காக 2.5 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு காவிரியில் திறக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் இன்று உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தகுந்தது.